பக்கம்:நற்றிணை 1.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

369


கள்ளுண்டு மகிழும் இயல்பினன்; திதலை படர்ந்த வேற்படையினை உடையோனான 'சேந்தன்' என்பவன். அவன் தந்தை 'அழிசி' என்பவன். தேன்மணம் கமழும் இதழ் விரிந்த புதுப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலையையும், அழகிய தேரினையும் உடையவன் அவ் அழிசி, அவனுக்கு உரியது 'ஆர்க்காடு' என்னும் பேரூர். வண்டு மொய்க்கும் நெய்தலின் மலர்கள் நெற்பயிரிடையே மலர்ந்திருக்கும் நீர்வளத்தைக் கொண்டதும் அம் மலர்களினின்றும் நறுந்தேன் கழனிகளிற் பெருகிக் கொண்டிருப்பதுமான சிறப்பையுடையது அவ் ஆர்க்காடு ஆகும். அதன் பெருமையைப் போல, விருப்பம் வருகின்ற பணைத்த தோள்களோடு பிற நலன்களும் வீறெய்தி விளங்கும் பெருமையள் தலைவியாவாள்; வலைப்பட்ட மானினது குளிர்ச்சி கொண்ட கண்களைப் போன்ற கண்களையும் அவள் உடையவள். இளமகளாகிய அவளது சில சொற்களே பேசும் செவ்வாயிடத்தே முகிழ்த்த குறு நகையினைக் கண்டதனாலே மகிழ்ச்சி கொண்டோய்! இனி நீதான் அவளையே நினைந்து துன்புற்று நலிவாயாக. அத் துன்பத்துடன் தானே கூடினையாக நெடிது வாழ்தலையும் செய்வாயாக!

கருத்து : "அவளை நின்னால் மறக்கவியலாது; ஆதலின் வருந்தி நலிவாயாக, நெஞ்சமே" என்பதாம்.

சொற்பொருள் : மேவார் – பகைவர். ஆர் அரண் – பிறரால் வென்று கைக்கொள்ளுதற்கரிய காவன் மிகுந்த கோட்டை. மாரி – மழை; அதன் வன்மை கொடைமிகுதிக்கு உவமிக்கப் பெற்றது; அது பிரதியுபகாரத்தை எதிர்பாராதே வழங்கும் தன்மை. எஃகு – வேல்; திதலை எஃகென்றது பகைவரது குருதிக்கறையோடு விளங்கிய எஃகம் ஆதலினால், சேந்தன் தந்தை – சேந்தனின் தந்தை. அரியல் – மது; இங்கே தேன். நலம் வீறெய்தல் – நலம் மேம்பட்டு விளங்குதல், துவர் வாய் – சிவந்த வாய்.

விளக்கம் : அவளைக் கண்டு கொண்டதற்கு அந் நாளிலே மகிழ்ந்த நெஞ்சமாதலின், அவளைப் பிரிந்ததற்கு வருந்துதலும் அதற்கே உரித்தென்பான், 'நோ, இனி' என்றனன். திதலை – தேமற புள்ளிகள்: இது குருதிக்கறை படிந்த வேலின் தோற்றத்தன்மைக்கு ஒப்பிடப் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/370&oldid=1706912" இலிருந்து மீள்விக்கப்பட்டது