பக்கம்:நற்றிணை 1.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

நற்றிணை தெளிவுரை


விளக்கம் : 'பலருளும் அன்னை என் நோக்கினள்' என்றது, தோழியர் பலருள்ளும் தானே தலைவிக்கு உடனுறையும் உயிர்த்தோழியாதலால் தன்னைக் குறித்துத் தலைவியைப்பற்றி வினவுவாள்போல நோக்கினள் என்றனளாம். இதனால், தான் இடைநின்று அவர்களது களவுறவிற்கு உதவுவதற்கு இயலாமையைக் கூறித் தலைவியை வரைந்து கோடற்கு வற்புறுத்துகின்றாளும் ஆம். 'நேற்றுத் தேரொன்று வந்ததென அலரெழுந்தது' என்றமையால், 'இன்று வாரற்க' என்பதும் உணர்த்தினளாயிற்று. அவன் அதுபொழுது தேரிலன்றி நடந்தே வந்தமையும் புலனாயிற்று. 'கொய்யேன் ஆயின்' என்றது, தலைவி இற்செறிக்கப்படுவாளாதலை அறிவுறுத்தியதாம்; இது தலைவியைத் தானாகவே புனைந்து கொண்டு கூறியதும் ஆகும். 'வறுந்தேர் போதல் அரிது' என்றதனால், 'வரைந்து இவளையும் உடன் கொண்டு போதலே சிறந்தது' என்றனள்; அன்றி, 'உடன் போக்காகவேனும் கொண்டு செல்க' என்றனளுமாம். 'கானல் வந்து' என்றது, கானற்சோலையாகிய குறியிடத்தை நினைவுபடுத்தியதாம்.

உள்ளுறை : 'ஞாழலின் ஒள்ளிய பூங்கொத்து பூக்களை உதிர்த்து வண்டற் பாவையை அழகு செய்யும்' என்றது, 'எம்மாற் காக்கப்படும் தலைவிக்கு நின்னருள் புதுப்பொலிவு தரும்', என்பதாம்.

மேற்கோள் : நெய்தனிலத்து இளமகளிர் வண்டற் பாவையையும் பஞ்சாய்ப் பாவையையும் புனைந்து விளையாட்டயரும் இயல்பினராவர் 'ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டியன்ன என்னலம் தந்து' என வரும் குறுந்தொகையடிகளும் (238: 3-4); ஒண்டொடி மகளிர் வண்டலயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை' எனவரும் குறுந்தொகையடிகளும் (243: 3-4) இதனைக் காட்டுவனவாம். ஞாழலைப் புலிநகக் கொன்றை எனவும் கொள்வர்; ஆரல் மீனின் முட்டையை உவமையாகவும் கொள்வர்; வெண் சிறுகடுகும் தினையரிசியும் உவமைகளாகக் கூறப்படுவதும் உண்டு இவற்றால் இஞ்ஞாழலென்பது நெய்தனிலத்து மரவகையுள் ஒன்றென்பது விளங்கும். 'வறுந்தேர் போதல் அரிது' என்பதற்கு, 'ஊரலர் எழுந்தது; அன்னையும் அறிந்தனள்: இனி அவன் வரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/373&oldid=1706930" இலிருந்து மீள்விக்கப்பட்டது