பக்கம்:நற்றிணை 1.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

385


கருத்து : 'காரும் அதோ தொடங்கிற்று; தலைவரும் சொற்பிழையாராய் மீள்வர்; அதுவரை நீயும் ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தொடி – முன்னது தோள்வளை; பின்னது கைவளை . பனி – நீர்த் துளி. ஒலிதல் – தழைத்தல். கதுப்பு – கூந்தல். கால் – காலிட்ட தோற்றம். உண்டுறை – உண்ணு நீர் எடுக்கும் நீர்த்துறை. கணங்கொள்ளல் – கூட்டங் கொள்ளல். எயில் – கோட்டை. தோல் – கிடுகு; கேடயம். செல் மழை – செல்பவாய மேகங்கள்.

விளக்கம் : தலைவன் படைத்தலைமை பூண்டோன் ஆதலின், எயின்மேற் காவலர் கிடுகுகளுடன் காத்திருக்கும் அசைவினை மேகத்தின் தவழ்தலுக்கு உவமையாகக் கூறினள் என்று கொள்க. ஆகவே, அவன் சென்றவினை முடிவுற்றதென்பதும், பகைவரது கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனன் என்பதும் விளங்கும். காரின் வரவுக்குத் தலைவியது கூந்தலையும். மின்னலுக்குக் கைவளைகளின் ஒளியையும் கூறியது, அவற்றைக் காணும் அவனது உள்ளத்தே தலைவியின் நினைவு மேலெழுவதாகும்; ஆதலின் அவனும் விரைய மீள்வான் என வற்புறுத்தியதாம். 'எயில் ஊர்' என்பதனை, 'எயிற் பட்டினமாகவும்' கொள்ளலாம்; எயிற்பட்டினம் 'ஆந்தை' என்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவனுக்கு உரியது; இதனைப் புறநானூற்று 71ஆம் செய்யுளுள் வரும் 'மன்னெயில் ஆந்தையும்' என்னும் பூதப்பாண்டியன் வாக்கால் அறியலாம். 'எயிற்கோட்டம்' தொண்டைநாட்டுக் கோட்டங்களுள் ஒன்றாதலும், 'எயில்' என்னும் ஒரூர் தொண்டை மண்டிலத்து இருந்ததையும் நினைக்க.

198. பெயர் பொலிக!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : பின் சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

[(து–வி) தலைமகன் தலைமகளையும் உடன்கொண்டானாகத் தன்னூர்க்குச் சென்றனன் அவரைத் தேடிச் சென்ற செவிலித்தாய், எதிரே வருவாரான தலைவனும் தலைவியுமாகிய வேற்றார் இருவரைக் கண்டு, தன் உள்ளத்துயரம் மேலெழ, அவர்க்கு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/386&oldid=1706955" இலிருந்து மீள்விக்கப்பட்டது