பக்கம்:நற்றிணை 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

நற்றிணை தெளிவுரை


செவ்விதான அணிகளை உடையாய்! *நிலம் பிளவுபட்டுப் போமாறு இறங்கியுள்ள வேரினையும், பெரிதானகிளைகளையும், உடும்புகள் பொருந்தியிருத்தலைப் போலத் தோற்றும் பொரிந்த செதில்களையுடைய நெடு மரத்தினையும் கொண்டு விளங்குவது விளாமரம். பச்சைக் கம்பளத்தை விரித்தாற் போலத் தோன்றும் பசும் பயிரினிடத்தே, ஆடுதல் ஒழிந்த பந்தானது கிடப்பதனைப் போல, அதன் கிளையினின்றும் மூக்கு இறுபட்டதாக வீழ்ந்த காய்கள் எம்மருங்கும் வீழ்ந்து பரந்து கிடக்கும். அத்தகைய விளாம்பழங்களையே தமக்கு உணவாகவுடைய மக்களைக் கொண்டதும், செல்லுதற்கு அரியதுமான பாலைவழியிலே, யாமும் செல்லா நிற்பேம்' எனத் தலைவர் நின்பாற் கூறினர். கூறுதலும், 'அத்திறம் நன்று' என விருப்புடனே நீயும் அதனை உடம்பட்டுக் கூறினை. அங்ஙனம் கூறினதனாலே, நீயும் எமக்கு நல்லதொன்றையே செய்தனை யாவாய் ஆடவர்கள் வினைமேற் கொண்ட உள்ளத்தினரே யாவர்; அவர் பொருளீட்டுதலின் பொருட்டாகத் தம் இல்லினின்று நீங்கியும் போவர்; அங்ஙனம் போதற்காலத்திலே, அதனை மறுத்துக் கூறாதே உடன்பட்டு நிற்றலே, அச் செயல் வெற்றி யுறுதற்குரிய பண்பாகும்.

கருத்து: 'அவனைப் என்பதாம்.

பிரிந்து

ஆற்றியிருப்பேன்'

சொற்பொருள்: வெள்ளில் - விளாமரம். ஆட்டு-விளை யாட்டு. கம்பலம் - கம்பளம்; விரிப்பு. புரிதல் - விரும்புதல்.

விளக்கம் : விளாமரத்தின் பொரிந்து தோன்றும் காட்சியை, 'உடும்புகள் பொருந்தியிருந்தாற்போல' என வருணிக்கின்றனர். 'வெள்ளில் வல்சி' யாயினும், அதுதான் பசும்பயிரிடை வீழ்ந்து கிடந்தது, அதனை எடுப்பாரற்ற நிலையிலே நாட்டின் வளம் மலிவுற்று நிலவியிருந்ததனால். கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்' என்றது, தம் நாட்டு நிலையாக இருக்க, அவன் செல்லும் பாலைவழி, இந்த வெள்ளிலே உணவாக அமைந்த கொடுமையுடையது எனக் கூறினளாகவும் கொள்க. 'ஆடவர் செயல்படு மனத்தர்; அவர் செய்பொருட்கு அகல்வர்' எனக் கூறுவதன் மூலம், தான், தலைவன் மீண்டுவருங் காலத்தின் எல்லைவரைக்கும் பொறுத்திருக்கும் கற்புத் திண்மையுடையவள் என்பதையும் சொல்லினாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/53&oldid=1627175" இலிருந்து மீள்விக்கப்பட்டது