விளையும் உயிர் 87
ஆண்டவனுடைய அடியார்கள் என்றால் அவர்கள் அனைவரும் சமம். அவர்களுக்கிடையில் பிறப்பினால் பேதம் என்று கூறிப் பிரித்துப் பேசுவது பேதமை. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும். என்பது தமிழ்மறை, திருக்குறள். அவ்வகையில் கணக்கிலாச் செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலுங்கூட அவர்கள் இறைநெறியை மதிக்காத போற்றாத உள்ளமுடையோராய் இருப்பா ரேயானால் அவர்களை ஒருபோதும் மதியோம் என்றார். அதே நேரத்தில், அங்கங்கள் எலாம் அவ்வுடம்பைப் பற்றியுள்ள தொழு நோய் காரணமாக அழுகியிருந்து, மேலும் அவர் பசுவினைக் கொன்று அதன் ஊனினைத் தின்று வாழும் கருணையற்ற கொடுமை மிக்க வாழ்வு நடாத்தும், கீழ்ச்சாதியென வழங்கும் புலையரே யாயினும் அவர் ஈசனுடைய அடியவராய், அவன் நெறி நிற்கும் நல்ல மனத்தராய் விளங்கினால் அவரே யாம் வணங்கும் கடவுளர் என்று ஆண்டவன் அருள் நெறி பின்பற்றும் புலையரையும் உயர்த்திப் பேசக் காணலாம். பாடல் வருமாறு:
“ சங்கநிதி பதுமகிதி இரண்டும் தந்து
தரணியோடு வான் ஆளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. “
‘எல்லோரும் சமம் என்ற இந்தக் கருத்தையே மேலும் சற்று வன்மையாகவே பிறிதொரு பாடலில் கூறியுள்ளார்.