பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாதுக்கு வந்த புலவர்

பாண்டிய நாட்டுக்கு ஒரு சமயம் ஒரு பெரிய மனிதர் வந்திருந்தார். அந்தப் பெரியவரின் பெயர் அரிசங்கரர் என்று கூறினார்கள். அவர் வடக்கேயுள்ள காசியைச் சேர்ந்தவர். நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெட்டுப் புராணம், இதிகாசம் எல்லா வற்றிலும் நல்ல தேர்ச்சியும் திறமையும் மிக்க அந்தப் பெரிய மனிதர், தம்முடைய அறிவைத் தாமே பெரிதாகப் போற்றிக் கொண்டார்.

தம்முடைய கல்வித் திறமையை நிலைநாட்டி எல்லா நாடுகளிலும் புகழ்க் கொடி நாட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் எண்ணினார். இமயம் முதல் குமரி வரை தமக்கு எவரும் இணையில்லை என்று பெயரெடுக்க அவர் விரும்பினார்.

பரத கண்டத்தில் அக்காலத்தில் ஐம்பத்தாறு நாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று, அங்குள்ள கற்றறிந்த புலவர்கள், சமய ஆசிரியர்கள் எல்லோரையும் வாதில் வென்று புகழ்க் கொடி நாட்டினார்.

ந. சி. II-3