பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் ⚫ 75

சீவி நண்பனுக்கு ஒன்று கொடுத்தான்; ஒன்றைப் பருகினான்.

“ஆகா ! என்ன இனிப்பு ! நண்பா, இந்தக் கோடை வெப்பத்துக்கு, இந்தக் குளிர்ந்த இளநீர் எவ்வளவு இன்பமாக இருக்கிறது !” என்று நண்பன் பாராட்டிப் பேசினான்.

உள்ளபடியே இளநீர் மிக இனிப்பாக இருந்தது.

அப்போது இளைஞன் மனதில் பத்தாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவில் தோன்றியது. தந்தையின் கட்டாயத்தின் பேரில் தான் கால்வாய் வெட்டிய காட்சி மனக்கண் முன் தோன்றியது.

என்றோ ஒரு நாள் பலனை எதிர்பாராமல் அவன் அந்தத் தென்னை மரத்திற்குத் தண்ணீர் பாயச் செய்தான். அத் தென்னை மரம் தன் தாளிலே பெற்ற நீரைத் தலையிலே தாங்கித் தந்தது. அந்த நீர்தான் எவ்வளவு சுவையாக இருக்கிறது !

ஒருவருக்குச் செய்கின்ற உதவி வீண் போவதில்லை உதவி செய்யும்போது ஒருவருடைய துன்பத்தைத் தீர்த்தோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது. அதைத் திரும்பப் பெறும்போதோ, இளநீரின் இனிமை போல், அது இன்பமாக இருக்கும் என் பதில் ஐயமுண்டோ !

இப்படி யெல்லாம் எண்ணிப் பார்த்த அந்த இளைஞன் தன்னைத் தேடி வந்த தோழனுக்கு அவன் வேண்டிய உதவியைச் செய்தான். அந்த நண்பனும் மன மகிழ்ச்சியோடு தன் ஊருக்குத் திரும்பிச் சென்றான்.

கருத்துரை :- பலனை எதிர்பாராமல் செய்கின்ற உதவி வீண் போகாது.