பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நவகாளி யாத்திரை


உடனே பண்டித நேரு, "இதோ பாருங்கள்" என்று கச்சத்தை வரிந்து கட்டினார். கைச்சட்டை விளிம்புகளை மடக்கி விட்டுக்கொண்டார். சற்றுப் பின்னால் சென்று வேகமாக ஓடிவந்து சட்டென்று ஒரு கந்து பாய்ந்து அந்த வாய்க்காலை ஒரே தாண்டாகத் தாண்டிக் காட்டினார்!

இதைப் பார்த்த மகாத்மாஜி மூக்கின் மேல் விரலை வைத்து, 'ஹரேரே!' என்று ஆச்சரியப்பட்டுப் போனார். நேருஜியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "இதுபோல் ஒவ்வொரு வாய்க்காலையும் கடப்பதற்கு நான் பின்னுக்குப் போய் ஓடிவந்து தாண்டிக்கொண்டிருக்க முடியாதே" என்றார். நேருஜியும் மற்றவர்களும் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டனர்.

"நவகாளி என்னும் இலங்கைத் தீவிலே சமரஸம் என்னும் சீதையை அடைவதற்காக ராமன் அணை கட்டியது போல் காந்திஜியும் மூங்கில் பாலம் அமைத்துக் கடந்து செல்கிறார். ஜவஹரோ அந்தப் பாலத்தை ஹநுமானைப் போல் ஒரே தாவாகத் தாவிவிட்டார். ரொம்பவும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டேன்.