பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

41


ரொட்டி பேரம்!

தர்மாபூர் கிராமத்து ஜனங்கள் மகாத்மாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் தோப்புக்கு வெளியே வந்து காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது காலை மணி எட்டுகூட அடிக்கவில்லை. காந்திஜி தாம் செல்ல வேண்டிய வழியை விட்டுவிட்டு அருகிலிருந்த ஒரு சிறு ரொட்டிக் கடையின் சமீபம் சென்றார். அந்தக் கடைக்காரர் காந்தி மகாத்மாவைக் கண்டு பயபக்தியுடன் எழுந்து நின்றார். அந்தக் கடையிலிருந்த ஒரு முழு ரொட்டியை மகாத்மாஜி கையிலெடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார்.

"ஐயோ, மகாத்மாவுக்கு நல்ல பசி போலிருக்கிறது! அதனாலேதான் ரொட்டியை எடுத்துச் சாப்பிடப் போகிறார்" என்று கூறினார்கள் சுற்றியிருந்தவர்கள்.

காந்தி மகான் அந்த ரொட்டிக் கடைக்காரரைப் பார்த்து, "இந்த ரொட்டி என்ன விலை?" என்று கேட்டார்.

அந்தக் கடைக்காரர் பசியோடு வந்திருக்கும் மகாத்மாவுக்கு அதைப் பரிசாக வழங்க விரும்பினார். அதனால் விலை கூற மறுத்துவிட்டார்.

மகாத்மாஜி, "விலையைச் சொல்லும்" என்று அழுத்தமாகக் கேட்கவே, கடைக்காரர் தயங்கிக் கொண்டே, “ஓர் அணா" என்று பதில் கூறினார்.