பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நவகாளி யாத்திரை


"எல்லோருக்கும் ஓர் அணாவுக்குத்தான் விற்கிறீரா அல்லது எனக்கு மட்டும் குறைத்துச் சொல்கிறீரா?" என்று கேட்டார் மகாத்மா.

"எல்லோருக்கும் விற்கும் விலைதான்" என்று பதில் கூறினார் கடைக்காரர்.

மகாத்மா ரொட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். "இது ரொம்பச் சின்ன ரொட்டி; ஆகையால், இதற்கு அரையனாதான் கொடுக்கலாம். தாங்கள் அதிக லாபம் வைத்து விற்கிறீர்கள். கிராமத்து ஜனங்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்குச் சக்தியற்றவர்கள்" என்று கூறி, ரொட்டியைக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

பாவம்! ரொட்டிக் கடைக்காரருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாய்ப் போயிருக்க வேண்டும்.

கிராமத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் வியாபாரம் நடக்கிறதா என்பதைச் சோதிப்பதற்காகவே மகாத்மா மேற்படி ரொட்டியை விலை கேட்டிருக்க வேண்டும் என்பது அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ஊர்ஜிதமாயிற்று. அன்றைய மாலைப் பிரசங்கத்தில் பொதுவாக கிராமவாசிகளுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசினார். கிராமத்தைச் சுகாதார ரீதியாக வைத்துக் கொள்வதெப்படி, தெருக்களைக் கூட்டிச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதம், நீர்த்தேக்கங்களைப் பாழாக்காமல் குடிதண்ணீராக உபயோகிக்கும் முறை முதலியவற்றை விரிவாக எடுத்துச் சொன்னார். காலையில் தாம் ஒரு கடையில் ரொட்டி விலை