பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நவகாளி யாத்திரை


அங்கே மகாத்மாஜியை எதிர்கொண்டழைக்க மதுரை திரு. ஏ. வைத்தியநாதய்யர், திரு. சுப்பராமன் ஆகியவர்கள் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

சமயநல்லூருக்கு அடுத்தபடியாக ரயில் வேளாங்குடியில் போய் நின்றது. வேளாங்குடி ஸ்டேஷனில் எங்களையும், காந்திஜி கோஷ்டியையும் அழைத்துச் செல்லத் தயாராய் நின்ற மோட்டார் வண்டிகளில் ஏறிக் கொண்டோம். அவ்வளவுதான்! வேளாங்குடியில் ஆரம்பித்த கூட்டம் மதுரைக்குப் போய்ச் சேரும்வரை சாலையின் இருபுறங்களிலும் காந்தி மகான் தரிசனத்துக்காக 'ஜே ஜே' என்று மொய்த்துக் கொண்டிருந்தது. முன்னால் சென்ற நாங்கள் அவர்களுக்கெல்லாம், "காந்திஜி பின்னால் வந்து கொண்டிருக்கிறார்" என்று பதில் சொல்வதற்குள் எங்கள் நா வறண்டு தொண்டை கூடக் கம்மிப் போய்விட்டது.

கடைசியில் அனைவரும் பிரார்த்தனை மைதானத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே கண்ட காட்சியைப் பற்றி நான் என்னத்தைச் சொல்ல!

மைதானத்தில் வெகு தூரத்துக்கு வெகு தூரம்வரை கட்டியிருந்த அழகிய மின்சார விளக்குத் தோரணங்கள் பட்டப் பகல்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

மேடை மீது ஏறி நின்று சுற்றிலும் கவனித்தேன். நாலாபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை, இன்னும் அப்பால், அதற்கும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் இடம் வரை ஒரே ஜன சமுத்திரமாயிருப்பதைக் கண்டு என் தலை சுழன்றது. மயக்கம் போட்டுக் கீழே விழுவதற்கு இட வசதி இல்லையாகையால் பேசாமல் இருந்துவிட்டேன்.