பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

71


மதுரை யாத்திரை முடிந்து, பழநி போய்ச் சேரும்போது மணி ஐந்தரை ஆகிவிட்டது. பழநிக்குப் போகும் மார்க்கத்தில் திண்டுக்கல்லில் பிரமாதமான கூட்டம் கூடி மகாத்மாஜியை வரவேற்றது. திண்டுக்கல் தாண்டியதும் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்றபோது வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது.

சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்கப் போகிறதென்றால் மேற்படி இடத்தை நெருங்கும்போது அங்கு ஒரே கூச்சலும் கோஷமுமாக இருப்பதுதான் வழக்கம்.

ஒட்டன்சத்திரத்தில் இந்த அனுபவத்துக்கு முற்றிலும் மாறாகப் பரிபூரண அமைதி நிலவியது. இவ்வளவுக்கும் கூட்டம் சாதாரணக் கூட்டமாயில்லை. பதினைந்தாயிரம் பேர் கொண்ட மிகப்பெரிய கூட்டம்தான்.