பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நவகாளி யாத்திரை


காந்திஜிக்காக வங்காள சர்க்கார் ஒரு பிரத்தியேக ரயில் ஏற்பாடு செய்திருந்தனர்.

"கிவி" என்ற நீராவிப் படகை மகாத்மாவின் பிரயாணத்துக்காக, கோலந்தோ துறைமுகத்தில் தயாராக நிறுத்தி வைத்திருந்தனர்.

பல லட்சம் மக்கள் துறைமுகத்தில் கூடி நின்று மகாத்மாஜியை வழி அனுப்பியபோது அந்த மகான் தமக்கே உரித்தான இயற்கைப் புன்னகையுடன் கைகூப்பி வணங்கி, "நவகாளி சென்று வருகிறேன்" என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார்.

வங்காள சர்க்காரில் அப்போது தொழில் மந்திரியாக இருந்த ஜனாப் ஷம்ஷாலிதீன் ஆமதும் மற்றும் இரு பார்லிமெண்டரி காரியதரிசிகளும் மகாத்மாஜியுடன் துணையாகச் சென்றார்கள்.

இவர்கள் மூவரைத் தவிர மகாத்மாஜியுடன் டாக்டர் சுசீலா நய்யார், திருமதி அவா காந்தி, திருமதி சுசீலாபாய், தக்கர்பாபா, ஹேமா ப்ரோவா தேவி, மதன்லால் சென் முதலியவர்களும் இன்னும் சில பத்திரிகை நிருபர்களும் பிரயாணம் செய்தார்கள்.

"என்னை யாரும் பின்பற்றி வரவேண்டாம்; நான் இந்த யாத்திரையைத் தனிமையாகவே செய்ய விரும்புகிறேன்" என்று மகாத்மாஜி பல தடவை கூறியபோதிலும் அவரைச் சிலர் பின்தொடர்ந்தே செல்ல வேண்டியதாயிற்று.

காந்திஜி முதன்முதலாக செளமுஹானி என்ற ஊரில் தங்கினார். அங்கே திரு. ஜோன் மஜூம்தார் என்னும் ஒரு வியாபாரியின் வீடே மகாத்மாஜி தங்கும் இடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.