36
இன்றும் பழைய 'ஸ்பெஷல்' நாடங்களில் இந்த முறையில்தான் உரையாடல் நடைபெற்று வருகின்றது.
அந்த நாளில் பேசத் தெரியாத அப்பாவி நடிகர் எவராவது அகப்பட்டுக் கொண்டால் ஆபத்துத்தான். பேசத் தெரிந்த நடிகர் அவரைத் தாறுமாறான கேள்விகள் கேட்டுத் திக்குமுக்காட வைத்துச் சபையோரின் கைதட்டலைப் பெறுவார். நடிகர்கள் இருவரும் பேசத் தெரிந்தவர்களாக இருந்துவிட்டால் சில சமயங்களில் போட்டி வலுத்துவிடும். நீண்ட நேரம் வாதம் நடை பெறும். நடிகர்கள் கதையை விட்டு வெகுதூரம் விலகிப் போய் உலாவிக் கொண்டிருப்பார்கள்! சொந்த விவகாரங்கள் எல்லாம் அம்பலத்துக்கு வரும்.
"பூத்தொடுப்பது போல் பேசுகிறீரே?" என்று பெண் வேட நடிகர் பேசுவார். அந்தப் பேச்சின் மூலம் ஆண் வேட நடிகர் பூத்தொடுக்கும் குலம் என்பதைக் குத்திக் காட்டுவார். சபையில் கை தட்டல் ஏற்படும்.
ஆண் வேடதாரியும் சளைக்காமல் "உன் பேச்சு சன்னம் வைத்து இழைப்பது போல் இருக்கிறதே!" என்று கூறி, பெண் வேடதாரி ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர் எனபதை நினைவுபடுத்துவார். உடனே சபையில் இவருக்கும் கைதட்டல்! உரையாடல் இப்படியே போய்ப் பின்னிக் கொண்டிருக்கும். சொற் போர் வலுத்து, கடைசியாகச் சபையோர் சிலர் நாடகக் கதையை ஞாபகப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் உண்டு.
இப்படியெல்லாம் நடிகர்கள் கற்பனையாகப் பேசிக் கட்டுப்பாடு இல்லாதிருந்த காலையில், நாடகத்தைத்