ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்
101
மறுநாட்காலை 312 மணிக்கு முடித்தோம்! அக்காலத்தில் இத்தனை மணிக்குள் நாடகங்கள் முடிக்கவேண்டுமென்னும் நிபந்தனை கிடையாது. ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்கள், தெருக்கூத்துக்காரரைப்போல் 4 மணி வரையிலுங்கூட ஆடுவதுண்டு. இப்படி 612 மணிநேரம் இந்த நாடகம் நடந்தும் அதைப் பார்க்க வந்திருந்த ஜனங்களில் ஒருவரும் எழுந்திருந்து போகவில்லை! அன்றைத்தினம் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள் என்றே நான் சொல்ல வேண்டும். டிக்கெட் விற்றதனால் சபைக்கு அன்று வந்த ரொக்கம் 350 சில்லரை; இதன்றியும் எங்கள் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வந்திருந்தார்கள். இந்த நாடகம் இத்தனை நாழிகை பிடித்தற்குக் காரணம், அதை முதலில் அச்சிட்டபடி ஒரு வார்த்தையும் குறைக்காமல் ஆடப்பட்டதேயாம். அச்சுக் காகிதத்தில் சுமார் 150 பக்கங்கள் அடங்கிய ஒரு நாடகத்தை ஒரு வரியும் விடாமல் ஆடுவதற்கு 612 மணி நேரம் பிடித்தது ஒரு ஆச்சரியமன்று. இதன்றியும் ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாடினோம்! பாடினவர்களில் நானும் ஒருவன்! ராகம் தவறாமல் சுமாராகப்பாடும் சக்தி எனக்கிருந்தபோதிலும் அக்காலம் தாளம் எனக்கு நன்றாய் வராது. (இக்காலம் முற்றிலும் வராது!) அப்படித் தாளம் தவறி ஒரு பாட்டை நான் பாடியபொழுது, மேடையின் பேரில் பக்கப் படுதாவின் புறமாக நின்று கொண்டிருந்த எங்கள் கண்டக்டராகிய திருமலைப் பிள்ளை அவர்கள் காட்சி முடின்தவுடன் “சம்பந்தம், நீ நன்றாய் நடிப்பதை ஆபாசமாகப் பாட்டைப் பாடி ஏன் கெடுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டார். அது முதல் நாடக மேடையின் மீது பாட்டைப் பாடுவதில்லையென்று தீர்மானம் செய்து அநேக வருஷங்கள் பாடாமலே இருந்தேன். பிறகு என் ஆருயிர் நண்பனான சி. ரங்கவடிவேலு முதலியார் வேண்டுகோளின்படி “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் இத்தீர்மானத்தைக் கொஞ்சம் மாற்றினேன்.
அன்றைத்தினம் நாடகத்தில் சங்கீதத்தில் பெரும் கீர்த்தி பெற்றவர் எம்.வை. ரங்கசாமி ஐயங்காரே. இவர் கமலாகரன் வேஷம் பூண்டு பாடிய பாடல்கள் சபையோரனைவருடைய மனத்தையும் கவர்ந்ததென்றே நான் சொல்ல வேண்டும். இவர் பாடிய பாட்டுகளுக்கெல்லாம், ஒன்றும் விடாமல், எல்லாவற்றிற்கும் வந்திருந்த ஜனங்கள் கரகோஷம் செய்தனர்