பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

111


முன்பு நான் எனது நண்பர்களுக்குத் தெரிவித்தபடி, என் வழக்கத்தின்படி, எங்கள் சபையிலிருந்த இன்னின்ன அங்கத்தினர்க்கு இன்னின்ன நாடகப் பாத்திரம் என்று தீர்மானித்து, அந் நாடகத்தை எழுதி முடித்தேன். என் பழைய நண்பராகிய அ. வெங்கடகிருஷ்ணப் பிள்ளை , ஏதாவது ஒரு நாடகத்தில் தான் நாடகத் தலைவனாக நடிக்க வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொள்ள, அவர் படிக்கும் சக்தியைக் கருதி அவருக்காக “ஹேமாங்கதன்” என்னும் நாடகப் பாத்திரத்தை எழுதினேன். சோகரசத்தில் நன்றாய் நடிப்பாரெனக் கருதி கிருஷ்ணசாமி ஐயருக்காக “சௌமாலினி” என்னும் நாடகப் பாத்திரத்தை எழுதினேன். தன் பாடல்களினால் சபையோரை மிகவும் ரமிக்கச் செய்வாரெனக் கருதியும் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு “பால சூரியன்” பாத்திரத்தை ஏற்படுத்தினேன். ஸ்வாமி கொடுத்த புத்தியை நல்வழியில் உபயோகிக்காமல், கெட்ட வழியில் உபயோகித்து, விஷப்பரீட்சகனாகி, அதனால் பல துயரங்களை அனுபவித்து, முடிவில் தன் உயிரையே இழந்த ஜெயபாலன் என்னும் பாத்திரத்தை நான் எடுத்துக்கொண்டேன். “லீலாவதி - சுலோசனா” நாடகத்தில் பிரதாபசீலனாக நன்றாக நடித்த ராஜரத்தின முதலியாருக்கு “சௌரிய குமாரன்” என்னும் பாத்திரத்தைக் கொடுத்தேன். வாஸ்தவத்தில் வயிறு கொஞ்சம் பெருத்தவராயிருந்த ராஜகணபதி முதலியாருக்காக, “வயத்தான்” என்னும் கள்வன் பாத்திரம் எழுதி வைத்தேன்.

அக்காலத்தில் எங்கள் ஆக்டர்களெல்லாம் ஒத்திகைகளை வெகு குதூஹலத்துடனும் சுறுசுறுப்புடனும் நடாத்துவது வழக்கம். இப்போதிருப்பதுபோல் பெரும்பாலும் அக்காலம் அச்சிட்ட நாடகங்கள் கிடையாது. ஒவ்வொரு ஆக்டரும் தனது பாகத்தை எழுதிக்கொண்டுதான் படித்தாகவேண்டும். நான் காட்சி காட்சியாக எழுதி முடித்தவுடன், அவரவர்கள் தங்கள் தங்கள் பாகத்தை அவ்வப்பொழுதே எழுதிக்கொண்டார்கள். இப்படித் தாங்களாக எழுதிக் கொள்வதனால் ஒரு பெரும் நன்மையுண்டு. ஒரு ஆக்டருக்குப் பாடம் நன்றாய் வர வேண்டுமென்றால், தன் பாகத்தைப் பத்து முறை படிப்பதை விட, ஒரு முறை எழுதுதல், அதிகப் பிரயோஜனத்தைத் தரும்.

நாடகத்தைச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்று எண்ணி, ஒத்திகைகள் இரவு பகலாக நடத்தினோம். அச்சமயம், என்