பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலும் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களின் திரைகள், பக்கத் திரைகள் (Side wings), மேல் தொங்கட்டான்கள் (Flies) முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றைக் கண்ணுற்ற பம்மல் சம்பந்தனார், அவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற திரைகளைத் தன்னுடைய நாடகங்களிலும் பயன்படுத்தினார்.

பாரசீக நாடகக் குழுவினர் தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பத்தை விளைவித்தனர். இதற்கு முன்னர்த் தமிழ் நாடகங்களில், ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே இடைவெளி விடப்பட்டது. இக்குறை பாரசீக நாடகக் குழுவினர் வருகையால் தமிழ் நாடக மேடையில் களையப்பட்டது.

பாரசீக நாடகக் குழுவினர் பாத்திரங்களுக்கு ஏற்ப உடைகள் அணிந்திருந்தனர். அந்நாட்களில் தமிழ் மேடை நாடகங்களில் வறியவர்களாக நடிப்பவர்கள் செல்வந்தர்கள் போல் உடையணிந்திருந்தனர். அத்தகைய பொருந்தாப் போக்கையும் அந்நாடகக் குழு நீக்கிற்று.

நாடக அரங்கில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் கதை நிகழ்ச்சிக்கு ஏற்ப உடனடியாக மாறுகின்ற காட்சி அமைப்பையும் (Transformation scenes) பாரசீக நாடகக் குழுவினர் தமிழ் நாடக மேடைக்கு அறிமுகப்படுத்தினார்.

அந்நாளில் தமிழ் நாடக மேடையில் பக்க வாத்திய இசைக் கலைஞர்கள் ஓரத்தில் அமர்ந்திருந்தனர். ஆயின் பாரசீக நாடகக் குழுவினர் பக்க வாத்தியக் கலைஞர்களை நாடக மேடைக்கு முன்னர் அமர வைத்தனர். அதன் விளைவாகப் பக்க வாத்தியக் கலைஞர்கள் தமிழ் நாடக மேடையின் முன்னர் அமர்ந்தனர்.

பம்மல் சம்பந்தனார் ‘ருக்மாங்கதா’ என்ற நாடகத்தை உரையாடல்களும் பாடல்களும் இன்றித் தோற்றக் காட்சிகளின் மூலம் (Tableau vivantes) அமைத்து முதன்முதலில் தமிழில் நாடகத்தை நடத்தினார். இது மௌனக்காட்சி என்ற நாடக வகையைச் சார்ந்தது.

பம்மல் சம்பந்தனார் பல்வேறு ஊர்களில் நாடகங்கள் நடத்தியபோது அவருக்கு ஏற்பட்ட இடையூறுகளால் மனம் நொந்தார். ஆயினும் தமிழ்ச் சான்றோர் பழமொழிகளை நினைவுகூர்ந்து மனவலிமை பெற்றார். நாடகத்தில் நடிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் ஒவ்வொரு காட்சிக்கேற்றவாறு வரவேண்டிய பின்னணிக் காட்சிகளையும் நாடக நுணுக்கங்களையும் பிறர் நடத்தும் நாடகங்களுக்குச் சென்று பார்த்து அவற்றுள் கொள்ள வேண்டியவற்றை அவர் நடத்திய நாடகங்களில் பின்பற்றினார் என்பதை ஒளிவு மறைவின்றி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நாடக மேடையில் அவர் செய்த மாற்றங்களைக் கண்டு முதலில் முகம் சுளித்தவர்கள், பின்னர் அம்மாற்றங்களை முழுமனத்துடன் வரவேற்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.