பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நாடக மேடை நினைவுகள்


சேர்க்காமலும் என் அபிப்பிராயப்படி, இப்பாத்திரத்தை சற்றேறக்குறைய நன்றாய் நடிப்பவர் இவரே என்று சொல்ல வேண்டும்.

தற்காலத்திய தென் இந்தியத் தமிழ் நாடக மேடையில் ஸ்திரீகள் ஆண் வேடம் தரிப்பது மிகவும் கொஞ்சமேயாம். அதில் மனோஹரன் வேடம் ஒன்றாகும். சில நாடகக் கம்பெனிகளில் ஸ்திரிகள் இம் மனோகரன் வேடம் பூண்டு நடித்ததை நான் பார்த்திருக்கிறேன். அவர்களிலெல்லாம் காலஞ்சென்ற பாலாம்பாள் என்னும் மாதே மிகவும் நன்றாக நடித்ததாக என் அபிப்பிராயம். ஆடவர்கள் ஸ்திரி வேஷம் பூணுவதைவிட ஸ்திரிகள் ஆண் மக்கள் வேஷம் பூணுவது மிகவும் கடினம் என்பது என் எண்ணம். அப்படியிருந்தும் இந்தப் பாலாம்பாள் (இம் மாது சில வருஷங்களுக்கு முன் காலகதியடைந்து விட்டனள்) மனோஹரனாக நடித்தது எனக்குத் திருப்தியைத் தந்தது. என்ன இருந்த போதிலும் பெண்பாலாதலால் “சங்கிலி அறுக்கும் காட்சி”யில் மாத்திரம் அவ்வளவு திருப்திகரமாயில்லை.

பாய்ஸ் கம்பெனிகளில் (Boy's Company) அநேக கம்பெனிகள் இந்நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய எல்லா பாய்ஸ் கம்பெனிகளும், என் அனுமதியைப் பெற்று, நடத்தி வருகிறார்கள் என்றே நான் கூறவேண்டும். அவைகளில் இம் மனோஹரன் வேஷம் பூண்டவர்களுக்குள் ஜகன்னாத ஐயர் கம்பெனியில், காலஞ்சென்ற மதனகோபால் என்னும் சிறுவன்தான் மிகவும் நன்றாக நடித்ததாக என் அபிப்பிராயம். இச்சிறுவன் சிறு வயதிலேயே சில வருஷங்களுக்கு முன்பாக இறந்ததாகக் கேள்விப்பட்டு நான் துக்கப்பட்டேன்.

ஆமெடூர் சபையில் (Ameteur Dramatists) அநேகம் பெயர் இவ்வேஷம் தரித்திருக்கின்றனர்; அவர்களிலெல்லாம், கூடிய வரையில் என் மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது; சில வருஷங்களுக்கு முன் எக்செல்சியர் கிளப்பில் (Excelsior Club), சுப்பிரமணிய முதலியார் என்பவர் நடித்ததேயாம். இச்சந்தர்ப்பத்தில் என் நண்பர் ம.கிருஷ்ணய்யர் சில மனோஹரன் வேடம் பூண்டவர்களுக்கு வேடிக்கையாய்ப் பெயர் வைத்தது எனக்கு நினைவிற்கு வருகிறது; அவர்களுள் ஒருவருக்குக் காட்டு ராஜா மனோஹரன் என்று பெயரிட்டார்; மற்றொருவருக்குப் பஞ்சாங்கம் மனோஹரன் என்று பெயரிட்டார்; மற்றும் ஒருவருக்கு தாசரி மனோஹரன் என்று நாமமிட்டார்!