பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

161


இவ்வேடம் பூண்டு நடிப்பதில் அநேகர் ஒரு முக்கியமான தவறிழைக்கிறார்கள் என்றே நான் கூறவேண்டும். இங்ஙனம் நான் எடுத்துக்காட்டுவது அவர்கள் மீது குற்றம் கூறுவதற்கன்று. இக் குற்றத்தைத் திருத்தி இன்னும் செம்மையாக அவர்கள் நடத்த வேண்டுமெனக் கோரியே இதை எழுதுகிறேன். இந்நாடகத்தில் இரண்டாவது அங்கம் முதற்காட்சியில் மனோஹரன் தான் தன் தாயாருக்காகப் பகைவரிடமிருந்து ஜெயித்துக் கொணர்ந்த சிம்மாசனத்தின்மீது, தன் தந்தையும் அவரது வைப்பாட்டியாகிய வசந்தசேனையும் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, கோபாவேசங்கொண்டு, வாளை உருவியும் சத்தியசீலர் பத்மாவதி தேவிக்கு மனோஹரன் அளித்த வாக்குத் தத்தத்தை ஞாபகப்படுத்த, தன் வாக்கால் கட்டுப்பட்டவனாய், கண்களில் நீர் ததும்ப சபையைவிட்டு விலகுகிறான்; இச் சந்தர்ப்பத்தில் நான் நடிக்கும் பொழுதெல்லாம், ஒரு முறை சரேலென்று திரும்பிக் கோபத்துடன் வசந்தசேனையைப் பார்த்து விட்டுப் பெருமூச்செறிந்து, உடனே அரங்கத்தினின்றும் வெளியிற்போவது என் வழக்கம். இது நாடகம் பார்க்க வந்திருப்பவர்களுக்கெல்லாம் திருப்தியைக் கொடுக்கிறதென நான் சொல்ல வேண்டும். இப்படிச் செய்வது நன்றாயிருக்கிறதெனச் சபையோர் மெச்சுகிறார்களே என்று, இதை ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிச் செய்கிறார்கள் மற்றவர்கள். இது தவறென்பது என் கொள்கை. ஒன்றை ஒரு முறை செய்தால் நன்றாயிருந்தால், அதைப் பன்முறை செய்தால் அதிக நன்றாயிருக்கும் என்று எண்ணுவது நாடகச்சுவைக்கு உவப்பானதன்று. இச்சந்தர்ப்பத்தில் எனக்கு இரண்டு தமிழ்ப் பழமொழிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்று “அளவுக்கு மேல் உண்டால் அமுதமும் விஷமாகும்” என்பது; மற்றொன்று, “கரும்பு தித்திக்குமென்று வேருடன் உண்ணலாமா?” என்பதாகும். நான் மேற்சொன்னதைக் கருதி, இனியாவது இம் மனோஹரன் வேடம் பூணுபவர்கள், மேற்சொன்ன சந்தர்ப்பத்தில், ஒரு முறையே அவ்வாறு திரும்பிப் பார்த்துப் போவார்களாக.

இனி விஜயாளாக மற்றவர்கள் நடித்ததைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன். இப்பாத்திரத்தைப் பற்றி எனது நண்பர்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,