பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

163


இனி பத்மாவதியாக நடித்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். இதை எங்கள் சபையில் முதல் முதல் மேலே கூறியபடி அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாய் நடித்தபோதிலும், இப்பாத்திரத்தில், மிகச்சிறந்த பெயர் பெற்றவர் எனது நண்பராகிய எஸ். பத்மநாபராவ் பி.ஏ. என்பவரே. இவருக்குப் பாடத் தெரியாது. நாடகமேடையில் இவர் வாயெடுத்துப் பாடியதில்லை யென்றே நான் சொல்லவேண்டும். ஆயினும் கேவலம் வசனத்தில் மாத்திரம், இந்த வேஷத்தில் இவருக்கு நிகரில்லை என்று இவர் பெயர் பெற்றது மிகவும் மெச்சத்தக்கதே. இவருடைய ரூபம் பத்மாவதியின் வேடத்திற்கே சிருஷ்டிக்கப்பட்டது போலும் என்று பலர் புகழ நான் கேட்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எண்ணுகிறேன். பத்மாவதியின் கம்பீரியத்தையும், ஆழ்ந்த அறிவையும் திடச்சித்தத்தையும், இப்பெண்மணியே ஸ்திரீகளுக்கெல்லாம் ஓர் உதாரணமாயிருப்பவள் என்னும் அருங்குணங்களையும், ஒரு விதத்தில் தனக்குத் துரோகம் செய்தவராயினும் தன் புருஷனான புருஷோத்தமனிடமுள்ள பதிவிரதையின் வாஞ்சையையும், தன் குமாரனான மனோஹரனிடம் உள்ள அளவிலா - அழிவிலா அன்பும், தன் மருமகளாகிய விஜயாளிடம் பிரியமும், எப்படிப்பட்ட சோகத்திலும் உத்தம க்ஷத்திரிய குலத்துதித்த ஸ்திரீகளுக்குரிய மனோதிடமும், இன்னும் இந்த ஸ்திரீ ரத்னத்தின் இதர அரிய குணங்களையும், நாடக மேடைமேல் இவரைப்போல் நடித்துக் காட்டவல்லவர்கள் இந்த நாற்பது வருடங்களாக வேறொரு வரை நான் கண்டதில்லை யென்றே கூறவேண்டும். “கண்ணிற் சொலிச் செவியிநோக்கும் இறைமாட்சி” என்று கவி வர்ணித்ததை இவர் நாடக மேடையின்மீது நடித்துக் காட்டியுள்ளவர் என்றே நான் உறுதியாய்க் கூறவேண்டும். இவர் தற்காலம், (என்னைப்போல) வயோதிகனாகி, நாடகமாடுவதை விட்டு விலகிப் பல வருஷங்களாயின. இவரை நான் பார்த்தும் பல வருஷங்களாயின; ஆகவே இதை வாசிப்பவர்கள் இவரைப் பற்றி ஏதோ முகஸ்துதியாய்க் கூறுகிறேன் என்று எண்ணலாகாது. இவரைப்பற்றி இவ்வாறு உண்மையை எழுதவேண்டியது என் கடமை என எண்ணி எழுதியதாகவே கொள்ளும்படி நான் எனது நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வேடம் தரிப்பதில் இவருக்குள்ள பாண்டித்தியத்தைப் பற்றி. இன்னொருவிதமாக மதிப்பிட வேண்டியவனாயிருக்