பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

199


பேசுவது தவறு என்று ஷேக்ஸ்பியர் மஹாகவி ‘ஹாம்லெட்’ என்னும் அவரது மிகச் சிறந்த நாடகத்தில் குறித்திருக்கின்றார்.

மேற்சொன்ன துரைசாமி ஐயங்காருடன் ஹாஸ்ய பாகங்களில் இந்நாடகத்தில் சற்றேறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் கூட வந்தவர், மதுரகவி வேடம் பூண்ட ராஜ கணபதி முதலியாரே. இந்த மதுரகவியின் பாகத்தைப்பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். இப்பாத்திரம் இவருக்கு மிகவும் பொறுத்தமாயிருந்ததென நான் கூற வேண்டிய அவசியமில்லை. இவர், முன் நடந்த மனோஹரன் நாடகத்தில் வந்தனாக நடித்தார் என்பது என் நண்பர்களுக்கெல்லாம் ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். இந்த இரண்டு நாடகங்களிலும் இவரைக் கண்டவர்கள், பிறகு வெகுகாலம் வரையில் இவரைப் பார்க்கும்போதெல்லாம் “சந்தேகமில்லை!” என்றாவது, அல்லது “உங்கள் தகப்பனார் என்ன சொல்லுகிறார்?” என்றாவது இவரை ஏளனம் செய்துகொண்டிருந்தனர். இந்த வேடிக்கையை முதல் முதல் ஆரம்பித்தவர்கள், பெங்களூரில் இவரை நாடகமேடையிற் பார்த்த சில நண்பர்களே! சில வருஷங்கள் வரையில், தற்காலம் எங்கள் சபையில், வி.வி. சௌந்தரராஜ ஐய்யங்கார், கே. வரதாச்சாரியார், ஷண்முக முதலியார் மூவரும் எப்படி அடிக்கடி ஒன்றாய் ஹாஸ்ய பாகங்களில் வருகிறார்களோ அப்படியே அக்காலத்தில், துரைசாமி ஐயங்கார், ராஜ கணபதி முதலியார், ஷண்முகம் பிள்ளையாகிய மூவரும் ஒன்றாய் வந்து கொண்டிருந்தனர். இம்மூவருக்கென்றே, இரண்டு நண்பர்கள், சத்ருஜித் முதலிய நாடகங்களில் ஹாஸ்ய பாகங்களை நான் எழுதியிருக்கிறேன். ச. ராஜகணபதி முதலியார் எங்கள் சபையில் நன்றாய் நடித்த ஹாஸ்ய பாகங்களில் “மதுரகவி” ஒரு முக்கியமானதென்பது என் அபிப்பிராயம்.

நான் “சாரங்கதரனாக” நடித்ததும் நன்றாயிருந்ததென எனது நண்பர்கள் கூறினார்கள். நாடகம் பார்க்கவந்தவர்களும் அப்படியே அபிப்பிராயப்பட்டதாக நான் அறிந்தேன். மனோஹரன் நாடகத்தில் என் குரல் கம்மிப்போய் நாம் நன்றாய் நடிக்காதபடி கெட்டதே, இதிலாவது நற்பெயர் எடுக்கவேண்டு மென்று நான் பிரயத்தனப்பட்டேன். சாரங்கதர நாடகம் நடந்த நாள் என் குரல் செம்மையாகி விட்டபடியால், என் பிரயத்தனத்தில் நான் சித்தி பெற்றேன் என்றே எண்ணுகிறேன்.