பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

நாடக மேடை நினைவுகள்




விவாதத்தினாலோ, வேறு என்ன காரணத்தினாலோ ஒற்றுமை என்பதில்லாமற் போயிற்று. இங்கு ஆடிய தமிழ் நாடகங்கள் “இரண்டு நண்பர்"களும், “ரத்னாவளி” யுமாம். ரத்னாவளி நாடகத்தைப் பெங்களூரில் முதலில் ஆட வேண்டுமென்று விரைவில் எழுதி முடித்தேன். இம்முறை என்னாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு எங்களுடன் வந்தபடியால், அவர் அவ்விரண்டு நாடகங்களிலும் முக்கிய ஸ்திரீவேஷம் தரித்தார். அ. கிருஷ்ணசாமி ஐயர் மற்றொரு ஸ்கிரீ வேடம் பூண்டனர். இவ்விரண்டு நாடகங்களிலும்; தெலுங்கு நாடகத்தில் இவரும் கே. ஸ்ரீனிவாசனும் சந்திரமதியாகவும் ஹரிச்சந்திரனாகவும் நடித்தனர். எங்கள் சபையிலிருந்து முக்கிய ஆக்டர்கள் அனைவரும் நடித்தோம். நாடகங்கள் என்னமோ நன்றாய்த் தானிருந்தன என்று வந்தவர்கள் எல்லாம் கூறினர். நானும் அப்படித்தான் நினைத்தேன்; வரும்படி மாத்திரம் வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சரியான நாடக சாலையில் நாங்கள் நடத்தாதபடியினால் என்றும் கூறுவதற்கில்லை. மூன்று நாடகங்களையும் முடித்துக்கொண்டு பட்டணம் திரும்பும் பொழுது இனி பெங்களூரில் சபையுடன் கால் எடுத்து வைப்பதில்லை என்று தீர்மானித்துக்கொண்டேன். அத் தீர்மானத்தினின்றும் பிறழாது இருந்தேனாயின் சபைக்கு மிகவும் நலமாயிருந்திருக்கும். ஏனெனில் அதனின்றும் மாறி, மூன்றாம் முறை, மறுபடி பெங்களூருக்குப் போனோம். அதனால் சபைக்குப் பெரும் நஷ்டமுண்டாயிற்று. இந்தக் கதையைப் பிறகு எழுதுகிறேன்.

இங்கு நாங்கள் முதன்முறை ஆடிய நாடகமாகிய ‘ரத்னாவளி'யைப்பற்றி நான் கொஞ்சம் எழுத வேண்டும். இந்நாடகம் ஸ்ரீஹர்ஷன் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது; நான் தமிழில் அமைத்ததற்குச் சில வருஷங்களுக்கு முன் இது இங்கிலீஷில் மொழி பெயர்க்கப் பட்டிருந்தது. நான் தமிழில் அமைத்ததற்குச் சில வருஷங் களுக்கு முன்பாக, எனது நண்பர் கா. சரவணமுத்துப்பிள்ளை பி.ஏ. என்னும் யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர், வேறொரு நாடகச் சபைக்காக இதைத் தமிழில் மொழி பெயர்த்தனர். இதை அச்சபையார் ஆடியபொழுது, நான் போய்ப் பார்த்தேன். நாடக விளம்பரத்தில், ‘பாப்ரவ்யன்’ என்று ஒரு நாடகப் பாத்திரத்தின் பெயர் போட்டிருந்தது. “இது யார் இது?