பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

நாடக மேடை நினைவுகள்




வரும்போது, சிறைச்சாலைக் காட்சியில், வத்சராஜன், பெண் வேடம் பூண்டு வந்து தன் காதலியை, வாசவதத்தை அறியாதபடி சந்திப்பதாக ஒரு காட்சி எழுதினேன். இது சம்ஸ்கிருத கிரந்தத்தில் கிடையாது. அக்காட்சி வரும்பொழுது, ஜெயராம் நாயகர் எனக்கு அருகிலிருந்து ஸ்திரீ வேஷம் தரிப்பித்தார். என் உருவை நான் கண்ணாடியிற் பார்த்த பொழுது இவ்வளவு அசங்கியமாயிருக்கிறோமா என்று எனக்கே நகைப்பு வந்தது. ஆகவே மேடையினமீது நான் தோன்றிய பொழுது வந்திருந்த ஜனங்கள் நகைத்தது மிகவும் பொருத்தமானதென எண்ணினேன். ஸ்திரீ வேடம் நமக்குப் பொருத்தமானது அல்ல என்று நான் நன்றாயறிந்தபோதிலும், இந்த நாடகத்தில் நான் வத்சராஜன் வேடம் பூணும்பொழு தெல்லாம், அவ்வேஷம் தரிக்க நேரிட்டது.

இந்நாடகத்தை நான் எழுதியதில் ஒரு விசேஷம் உண்டு. இதற்கு முன் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் வசன நடை மிகவும் சுலபமாயும், ஸ்தரீ பாலர்கள் படித்தபோதிலும் அர்த்தமாகும்படியானதாயும் எழுதி வந்தேன். (இப்பொழுதும் இந்த ஏற்பாட்டை விடவில்லை நான்.) அதன் பேரில் சிலர், தமிழ் வித்வான்களைப்போல் கடின நடையில் எழுதத் தெரியாது போலும் என்று என்னை ஏளனம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியும் எனக்கு எழுதத் தெரியும் என்று அவர்களுக்கு நிரூபிப்பதற்காக, எதுகை, மோனை அமைத்து, பல இடங்களில் செய்யுள் நடையைப்போலவே இருக்கும்படியாகக் கடினமான பதங்களுடன், இந்நாடகத்தில் சில காட்சிகளை எழுதினேன்; இதை வாசிப்பவர்கள் இந்நாட கத்தில் யௌகந்தராயணன் வசனங்களைப் பார்ப்பார்களாக. நாடகமானது சம்ஸ்கிருதத்தில் திருயச் காவ்யம் என்று சொல்லப்பட்டிருக்கிறது; அதாவது படிக்கத்தக்க விஷயமல்ல, பார்க்கத்தக்க விஷயம் என்பதாம்; அப்படிப் பார்க்கும் பொழுது, பார்ப்பவர்களுக்கு அர்த்தமாகாதபடி, தன் பாண் டித்யத்தைக் காட்ட, கடுந்தமிழில் எழுதுவதில் என்ன பிரயோஜனம்? ஆகவே அனைவரும் கேட்டு எளிதில் அர்த்தம் செய்து கொள்ளக்கூடிய நடையிலேயே எழுதுவது தகுதி என்பது எனது சித்தாந்தம். ஆகவே இந்நாடகத்தில் இவ்வாறு எழுதியது, என்னை ஏளனஞ் செய்தவர்களுடைய எண்ணத்தை மாற்றும் பொருட்டன்றி, வேறு காரணத்தாலன்று.