பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

நாடக மேடை நினைவுகள்





ஹாம்லெட் என்னும் பாத்திரம் ஆட முடியாது” என்று கூறினார். “அப்படியா? நம்மால் ஆகாத தொன்றுமிருக்கிறதா? அதை எப்படியாவது ஆடித்தான் பார்க்க வேண்டும்” என்று என் மனத்திற்குள் தீர்மானித்தேன். இதை நான் வெளிப் படையாக என் நண்பருக்குச் சொல்லவில்லை. வீட்டிற்குப் போனவுடன் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் (Hamlet) நாடகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க அதன்கஷ்டம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புலப்பட ஆரம்பித்தது. நாடகத்தை முற்றிலும் ஒரு முறை படித்தபின், என்னடா இது, இதை எப்படி நாம் மொழிபெயர்ப்பது? எப்படி நடிப்பது? என்ன அசாத்தியமான காரியத்தில் கையிட்டுக் கொண்டோம் எனும் பயம் பிறந்தது. ஆயினும் “என்னால் முடியாது, நீ சொன்னது சரிதான்” என்று எனது நண்பரிடம் ஒப்புக் கொள்வதா என்னும் ரோஷத்தினால், எப்படியாவது முயற்சி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். “தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்” எனும் தெய்வப்புலமை திருவள்ளுவர் குறள் ஞாபகம் வந்தது. ஆகவே ஒருவாறு என் மனத்தைத் திடம் செய்துகொண்டு அந்நாடகத்தை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். ஸ்ரீராம தூதனாகிய அனுமாருக்கு, அவருடைய சக்தியை அவருக்கு மற்றவர்கள் எடுத்துக் கூறினால்தான் அவரால் ஒரு காரியம் செய்து முடிக்க முடியும் என்று ஒரு பழங்கதை யுண்டு. அதுபோல் உன்னால் இது முடியாது என்று யாராவது கூறினால்தான், என்னால் முழுப்பிரயத்தனம் செய்ய முடியும்போலும். புத்தி, பராக்கிரமம் முதலிய மற்றெதிலும் இல்லாவிட்டாலும், பிடிவாதத்தில் ஹனுமாருடைய அம்சம், அணுவளவு என்னிடமிருக்கிறதென நினைக்கிறேன்.

இப்படி க்ஷாத்திரத்தின் பேரில் நான் எழுத ஆரம்பித்த நாடகமானது, பூர்த்தியாக ஆறு வருஷங்களுக்குமேல் பிடித்தது. முதற்காட்சியை மொழி பெயர்ப்பதற்கே சில மாதங்கள் பிடித்தன. பிறகு இரண்டாம் காட்சியில் காலதேவன் (Cladius) என்னும் அரசனுடைய பெரிய வசனமொன்றை மொழிபெயர்ப்பதில், ஒரு கஷ்டமான கட்டத்திற்கு வந்து, என் மனத்திற்குத் திருப்தியாகும்படி அதை எழுத முடியாமல் திகைத்தவனாய் நின்று விட்டேன். என்னுடைய ஏற்பாடென்ன வென்றால், ஏதாவது நாடகத்தை எழுதிக்கொண்டு வரும் போது, என் மனத்திற்கே திருப்தியாயிருந்தால்தான் மேலே