ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்
263
வந்தது என்று திருப்தியாகிற வரையில், என்னை விடமாட்டார் அவர்; ஒத்திகை பார்ப்பதற்கு நான் சளைவேனே யொழிய, தான் ஒத்திகை செய்வதற்குச் சளையமாட்டார். இந்த “சோகை பிடித்த ஜகந்நாதன்” இந் நாடகத்தில் ஒருவிதமான நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வேண்டியிருக்கின்றது; அதை நான் பன்முறை கஷ்டப்பட்டே கற்றேன்; இதை நான் இவருக்குச் சொல்லிக் கொடுத்தேன்; இதைப் பன்முறை நாங்கள் ஒத்திகை செய்திருந்தோம்; இருந்தும் மனத்தில் திருப்தி யடையாதவராய் அக்காட்சியில் தான் வருவதற்கு முன் பக்கப் படுதா அருகில் நின்று கொண்டு “வாத்தியார், வாத்தியார், இன்னொரு தரம் அந்தச் சிரிப்பைக் காட்டுங்கள்” என்று கேட்டது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கின்றது. இதை எனக்குப் பெருமையாக இங்கு நான் எழுதவில்லை. எனது நண்பரது இடைவிடா ஊக்கத்திற்கு ஓர் உதாரணமாகக் கூறுகின்றேனே ஒழிய வேறொன்றில்லை. சாதாரணமாக சபைகளில் ஒரு முறை ஏதாவது சொல்லிக் கொடுக்குமுன், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று கூறுகிற ஆக்டர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. இவர் ஜகந்நாதனாக நடித்து அன்றைத் தினம் பெரும் பெயர் பெற்றபிறகு இப் பாத்திரத்தருகில் யாரும் அண்டாததே, இவர் பெருமையை நிரூபிப்பதாகும்.
எங்கள் சபையில் இதற்குக் கொஞ்ச நாளுக்கு முன்புதான் சேர்ந்த தெலுங்கு ஆக்டராகிய வெங்டாசல ஐயர் அச்சுதன் வேடம் பூண்டார். இதுதான் இவர் முதல் முதல் எங்கள் சபையில் தமிழ் நாடகத்தில் வேஷம் பூண்டது. இவர் தன் மரணபர்யந்தம், எங்கள் சபையில் தமிழ் தெலுங்கு பாஷைகளில் நடித்ததுமன்றி, நாடகப் பாத்திரங்களுக்கு வேஷம் தரிப்பதில் மிகவும் உதவி புரிந்தவர்; முக்கியமாக இவ்வருஷ முதல் தன் ஆயுள் காலம் வரையில் எனக்கு வேஷம் தரித்தவர். ஆகையால் இவரைப்பற்றிக் கொஞ்சம் எழுதி, இவருக்கு நான் செலுத்த வேண்டிய கடனைக் கொஞ்சம் தீர்க்க முயலுகிறேன்.
இவரது முழுப்பெயர் வேதம் வெங்கடாசல ஐயர்; மஹா மஹோபாத்தியாயர் வேதம் வெங்கடராயலு சாஸ்திரியாருக்கு நெருங்கிய பந்து; தெலுங்கு பாஷையில் மிக்க பாண்டித்ய முடையவர். இவர் எங்கள் சபையைச் சேருமுன், ஜி.சி.வி. ஸ்ரீனிவாசாச்சாரியர் ஏற்படுத்திய மதராஸ் ஓரியண்டல் டிராமாடிக் சொசைடியில் சேர்ந்து, அதற்காக மிகவும்