பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/336

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

321



அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷயமாகுமல்லவா? இதை என் அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த என் நண்பர் வாமன்பாய், “சம்பந்தம்! ஜாக்கிரதையாயிரு, வருகிற ஸ்மசானக்காட்சியில் நீ மிகவும் அமைதியுடையவனாயிருக்க வேண்டும்!” என்று எச்சரிக்கை செய்தார். அவர் இவ்வாறு எச்சரிக்கை செய்தும் பயன்படாமற் போயிற்று. மேற்சொன்ன காரணத்தினால் அக்காட்சியில் சாந்தத்துடன் நடிக்காது அதைக் கெடுத்து வைத்தேன் என்று எண்ணுகிறேன்.

தவறிழைத்தால் அதற்குப் பிராயச்சித்தம் வேண்டாமா? ஆயினும் அக்காட்சி ஆனவுடன், நான் செய்த தப்பிதத்தை அறிந்தவனாய், என் புத்தியை ஸ்திரப்படுத்திக்கொண்டு மனத்தைத் திருப்பி, கடைசிக் காட்சியில் சரியாக நடித்தேன் என நம்புகிறேன். நான் இந்நாடகத்தில் நடித்ததைப் பற்றி இவ்வளவு விவரமாய் எழுதுவதற்குக் காரணம், எனது கற்றறிந்த நண்பர்கள் நான் நடித்த நாடகங்களுக்கெல்லாம் இதுதான் மிகச் சிறந்தது என்று கூறுவதேயாம். ஒருவிதத்தில் எனக்கும் அப்படித்தான் கொஞ்சம் தோற்றுகிறது.

இனி மற்ற ஆக்டர்களைப்பற்றி எழுதுகிறேன். எம். சுந்தரேச ஐயர், இந்நாடகத்தில் இரண்டு வேஷங்கள் பூண்டனர்; காலதேவனாகவும், அருவமாகவும்; அருவத்தின் பாகம் வேறொருவருக்குக் கொடுத்திருந்தது; ஒத்திகைகளில் அந்த ஆக்டர் நன்றாய் நடிக்காமையால், பிறகு சுந்தரேச ஐயருக்கு மாற்றப்பட்டது. இவர் இந்த இரண்டு வேஷங்களிலும் மிகவும் நன்றாய் நடித்தார். இதுதான் எங்கள் சபையில் இவர் கடைசி முறை நடித்தது. சில மாதங்கள் பொறுத்துத் தனது முப்பத்தைந்தாம் ஆண்டில் இவர் தேகவியோகமானார். இது எங்கள் சபைக்குப் பெரும் தௌர்ப்பாக்கியம் என்று சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் இவர் “ஒதெல்லோ” முதலிய நாடகப் பாத்திரங்களை ஆடுவதில் மிகவும் கியாதி பெற்றிருந்தார். தமிழிலும் காலதேவன் முதலிய பாத்திரங்களில் நல்ல பெயர் பெற்றார். இவரது ஞாபகச் சின்னமாக இவரது படமொன்று எங்கள் சபையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அ. கிருஷ்ணசாமி அய்யர் கௌரீமணியாகச் சபையோர் மெச்சும்படி நடித்தார் என்பதற்கையமில்லை. இவர்