பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/347

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

நாடக மேடை நினைவுகள்




அதன் பேரில் உதகமண்டலம் போய் மூன்று நாடகங்கள் கொடுக்க வேண்டும் என்றும்; அங்கு போகிறவர்களெல்லாம் ஆக்டர்கள் உட்பட ரெயில் சார்ஜ் தாங்களே போட்டுக் கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தோம்; ரெயில்வேக்காரர்கள், முன்பு இரண்டுமுறை போலவே எங்கள் சபைக்கு, இரண்டாவது வகுப்பில், பாதி சார்ஜில் போய் வரலாமென்று அனுமதி கொடுத்தனர். அதன்பேரில் சென்னையிலிருந்து மே மாதம் 24ஆம் தேதி புறப்பட்டுப் போய், அவ்விடம் இரண்டு தமிழ் நாடகங்களும் ஒரு தெலுங்கு நாடகமும் கொடுத்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை அவ்விடமிருந்து, 3ஆம் தேதி புறப்பட்டுப் பட்டணம் வந்து சேர்ந்தோம். இப்படிப் போய் வந்தவர்கள் ஆக்டர்களல்லாதார் உட்பட 31 பெயர். இதைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கும் சில முக்கிய விஷயங்களை இனி எழுதுகிறேன்.

இதைப்பற்றி நான் இப்பொழுது எழுதும்பொழுது, அநேக வருஷங்களுக்கு முன்னால் நான் குறிப்பிட்டிருக்கும் எங்கள் சபை நடத்தி வந்த “இந்திய நாடக மேடை” (Indian Stage) என்னும் பத்திரிகையில் நான் ஆங்கிலத்தில் எழுதிய விவரங்கள் எனக்கு மிகவும் உபயோகப்படுகின்றன. அவ்வியாசங்களை நான் பாதுகாத்து வைத்தது எனக்குப் பெரும் உதவியாயிற்று.

இம்முறை நாங்கள் வெளியூருக்குப் போகத் தீர்மானித்ததற்குக் கொஞ்சம் ஆட்சேபணை இருந்தது. முக்கியமாக எங்கள் சபையின் அங்கத்தினர் ஒருவர் ஆட்சேபணை செய்தார் என்பது என் ஞாபகம்; அவர் ஆட்சேபணை செய்தது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது, இரண்டு முக்கியக் காரணங்களினால்; முதலாவது, நான் சபையின் சார்பாக ஆரம்பிக்கும் அதன் விஷயங்களி லெல்லாம், ஆட்சேபணை யாதேனும் இருந்தால்தான் சரியாக ஈடேறும் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். இரண்டாவதாக, முக்கியமாக இந்த அங்கத்தினர் ஆட்சேபித்தால்தான், எதுவும் மிகவும் நன்றாய் முடியும் என்பது என் அனுபவம். அவர்மீது குற்றங்கூறவில்லை நான் அவர் வந்த ராசி அது!

நாங்கள் சென்னையை விட்டு உதகமண்டலம் போகும் பொழுது, எங்களில் பெரும்பாலர் மலை ரெயிலில்