பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/463

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

நாடக மேடை நினைவுகள்




இம்முறை கூடுமான வரையில் முதன் முறை வந்த பொழுது ஆடிய நாடகங்களை ஆடாது புதிய நாடகங்களை ஆட வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்தபோதிலும், கொழும்பு நேயர்கள், மனோஹரன் நாடகத்தை மாத்திரம் மறுபடியும் கட்டாயமாய் ஆட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே இதை இங்கு மூன்றாவது நாடகமாக வைத்துக்கொண்டோம். அதில் விஜயாளாக நடித்த எனதாருயிர் நண்பர் எல்லோருடைய மனத்தையும் கண்களையும் கவர்ந்தார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை . மறுநாள் சாயங்காலம் எங்களுடன் வந்திருந்த சூரிய நாராயணய்யா என்னும் ஒரு மெம்பர், தன் சிநேகிதர்கள் சிலருடன், சாயங்காலம் கொழும்பில் ஏதோ சாமான்கள் வாங்குவதற்காகக் கடைத் தெருவிற்குப் போயிருந்தனர். அச்சமயம் ஏதோ கொஞ்சம் மழை பெய்ய, ஒரு ஷாப்பருகில் அவர் சிநேகிதர்களுடன் தங்க, சிற்றுண்டி விற்கும் அந்த ஷாப்புக்காரன், அவர்களையெல்லாம் மிகவும் பரிவுடன் உள்ளே வரவழைத்து, அவர்களுக்கு வேண்டிய காபி, டீ, கேக்குகள், ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் கொடுக்க, எல்லாம் சாப்பிட்டானவுடன், சூரியநாராயண ஐயர், தாங்கள் சாப்பிட்டதற்காக ரூபாய் கொடுக்க, அதை வாங்கமாட்டேன் என்று மறுத்தார் அந்த ஷாப்புக்காரர்! “ஏன் ரூபாய் வாங்கமாட்டேன் என்று சொல்லுகிறீர்” என்று வினவ, அதற்கு அவர் “நீங்கள்தானே ரங்கவடிவேலு முதலியார். நேற்று பப்ளிக் ஹாலில் நாடகமாடியது? நீங்கள் இவ்வளவு தூரம் வந்து எங்கள் மனத்தையெல்லாம் திருப்தி செய்ததற்காக நான் இவ்வளவாவது உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டாமா?” என்று பதில் உரைத்தனராம்! இதை எனது நண்பர் தற்காலம் அட்வொகேட்டாயிருக்கும் சூரியநாராயணய்யாவே, நேரில் தெரிவித்தார். இதைச் சொல்லி, “நான் என்ன செய்வது மிஸ்டர் சம்பந்தம்? நான் எவ்வளவு சொல்லியும் அந்த ஷாப்காரர் நான்தான் ரங்கவடி வேலு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். நானல்ல வென்று எவ்வளவு சொன்னபோதிலும் ஏதோ வெட்கத் தினால்தான் அவ்வாறு கூறுகின்றேன் என்று எண்ணுகிறார்! சரி, ரங்கவடிவேலுவினால் எங்களுக்கெல்லாம் காசு செலவில் லாமலே லன்ச் (சிற்றுண்டி) கிடைத்தது” என்று நகைத்தார்.