பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/577

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

562

நாடக மேடை நினைவுகள்


எல்லாம் நீங்கள் மனம் வைத்தால் செய்து முடிப்பீர்கள். இனிமேல் எப்பொழுதாவது என்னிடம் தாளத்துடன் பாட்டு வராது என்று சொல்லுங்கள்! உங்களுக்கு பைன் போடுகிறேன்!” என்று சிரித்துக்கொண்டு கூறின உருவம், என் மனத்தைவிட்டு இன்னுமகலவில்லை! எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச அய்யங்காரும் நானும் ஒருவருக்கொருவர் பைன் போட்டுக்கொள்கிற வழக்கம்போல, இவரும் நானும் ஏதாவது தப்பு செய்தால் பைன் போட்டுக் கொள்வோம். ஆயினும் இதில் ஒரு வித்தியாசம். வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் பைன் போட்டுக் கொண்டால் அதையெல்லாம் ஒரு உண்டியிற் போட்டு ஏதாவது தர்மத்திற்கு உபயோகிப்போம்; எனக்கு ரங்கவடிவேலு பைன் போட்டால் நான் அதை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். அன்றியும், அவருக்கு நான் பைன் போட்டாலும் அவருக்கு, அதை நானே கொடுத்துவிட வேண்டும்! இதென்ன நியாயம் என்று கேட்டால், “நீங்கள் எழுதியிருக்கிறீர்களே, இரண்டு நண்பர்கள் என்னும் நாடகத்தில்! இது பெண்கள் நியாயம்!” என்று கூறுவார். என்னுடன் இப்படி வேடிக்கையாகப் பேசும்போதெல்லாம் தன்னை ஒரு பெண்ணாகவே பாவிப்பார்.

இந்த வள்ளி மணம் என்னும் ஒரு நாடகத்தில்தான் ஏதோ கொஞ்சம் தாளத்தை ஒட்டி நான் பாடியது. முதன் முதல் பகிரங்கமாக நாடக மேடையில் நின்று தாளத்துடன் எனது பாடல்களைப் பாடியபோது, எனது நண்பர்கள் எல்லாம், “ஓகோ! வாத்தியார்கூடத் தாளத்துடன் பாடக் கற்றுக்கொண்டோரே!” என்று கைகொட்டி நகைத்தனர்! இந் நாடகத்தில் முதல் முறை நான் நடித்தபொழுது, ஆரம்பித்த ஒரு வழக்கத்தை, இன்னும் அந் நாடகம் நடிக்கும்பொழுதெல்லாம் விட்டவனன்று. சுப்பிரமணியர் வேடம் பூண்டவுடன், கையில் அவரது வேலாயுதத்தை எடுக்குமுன், அதை அரங்கத்தின் கோயிலில் வைக்க வேண்டிய அவரது சிலை உருவத்தின் கையில் வைத்து, பூஜித்து, அதை நாடகத்தில் ஏந்தும்படியான சக்தி எனக்குத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தே பிறகு கையிலெடுப்பேன்.