பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/578

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

563


இந்த வள்ளி நாடகமானது அடிக்கடி அனேக சபைகளிலும் கம்பெனிகளிலும் ஆடப்படுகின்றமையால், இதில் வரும் கதாநாயகனான சுப்பிரமணியர் வேடத்தைப் பற்றிச் சற்று விரிவாக எழுத விரும்புகிறேன். நான் பார்த்தபடி அநேகம் முறை, முக்கியமாக நாடகக் கம்பெனிகளில், இவ் வேஷம் தரிப்பவர்கள், சுப்பிரமணியர் தன் சுய ரூபத்துடன் முதற் காட்சியில் தோன்றும்போது, சம்கி சொக்காய்களையும், நிஜார்களையும் அணிந்து அதன் பேரில் பூட்ஸ் அல்லது ஸ்லிப்பர்ஸ் போட்டுக் கொண்டு, தலையில் ஒரு சரிகைத் தொப்பியைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். இப்படி வருவதன் தவறு பாமர ஜனங்களுக்குத் தோன்றாவிட்டாலும், நல்லறிவு கொஞ்சமேனும் உடையவர்களுக்கு இது அருவருப்பை உண்டு பண்ணுகிறது என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. பூர்வகாலத்தில் ஜனங்கள் என்னென்ன உடையை அணிந்தார்கள் நமது தேசத்தில், என்று கண்டுபிடிப்பது சாலவும் கஷ்டமாயினும்; இந்தியர்கள் தெய்வங்களாக வணங்கும் சுப்பிரமணியர், ராமர் முதலியோர் இப்படி இப்படி உடைகளை அணிந்திருந்தார்கள் என்று சிறிது ஆராய்ச்சி செய்தபோதிலும் கண்டுபிடித்து விடலாம். அன்றியும் புராதனமாயுள்ள கோயில்களின் சிலையுருவங்களைக் கொண்டு சந்தேகமின்றி நிர்ணயித்து விடலாம். சங்க நூல்களில் முழங்கால் வரையில் அணியும் கால் சட்டைக்கு ஒரு பெயரே இருக்கின்றது வட்டுடையென்று; அதை அணிவதற்கு ஏதாவது அசந்தர்ப்பமாயிருந்தால் பட்டுப் பீதாம்பரங்களை அழகாக அணியலாம். இவை இரண்டில் சுப்பிரமணியர் என்றும் இளமை மாறாதவர் என்று கூறப்பட்டிருக்கிறபடியாலும், தமிழில் அவருக்கு முருகன் (முருகு - இளமை) என்கிற பெயர் இருப்பதாலும், முழங்கால் வரையில் சட்டையணிவதே தகுமென்பது என் அபிப்பிராயம். அன்றியும் தலையில் அவர் கிரீடமணிய வேண்டியது அவசியம். தற்காலத்திய சம்கி குல்லாய்களை அணிவது மிகவும் ஆபாசமாம்.

பிறகு இரண்டாவது காட்சியில் அவர் வேடுவனாய் வரும்பொழுது, மான் தோல் அல்லது புலித்தோல் அல்லது