ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்
579
பதங்கள் உச்சரிப்பதில் ஏதாவது பிசகு செய்வானாயின், எனக்கு வெறுப்புண்டாகுமன்றோ? நம்முடைய அனுபவத்தைப் போல், மற்றவர்களுக்கும் இருக்குமென்பது நாம் கவனிக்கற்பாலது.
இவ்வருடம் நவம்பர் மாதம் 19ஆம் தேதி மலையாளத்தில் பெருமழையினால் உண்டான சேதத்தின் கஷ்டத்தை நிவர்த்திக்கும் பொருட்டு ஏற்படுத்திய பண்டின் பொருட்டு, “லீலாவதி-சுலோசனா” நாடகத்தை நடத்தினோம். இந் நாடகத்திற்கு மாட்சிமை தங்கிய கவர்னர் லார்ட் வில்லிங்டன் அவர்களும் அவரது மனைவியும் தமது ஆதரவை அளித்தனர். இந்நாடகத்திற்கு ரூபாய் 949 வந்தது. அதில் செலவு போக மிகுதி ரூபாய் 640-12-0 அந்த பண்டுக்கு அனுப்பினோம். விக்டோரியா ஹாலில் நாங்கள் ஆடிய நாடகங்களுள் இதுதான் எங்கள் சபைக்கு அதிகத் தொகையைக் கொணர்ந்தது.
எல்லா விஷயங்களையும் யோசிக்குமிடத்து இந்த 1921ஆம் வருஷம்தான் எங்கள் சபை மிகவும் உன்னத பதவி அடைந்திருந்தது என்று கூற வேண்டும்.
இனி 1922ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
இவ்வருஷம் எங்கள் சபையில் நூதனமாய் நடத்திய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன இரண்டாம்; முதலாவது, எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்த “வேணி சம்ஹாரம்” என்பது. இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு, பானுமதியாய் வேஷம் பூண, நான் துரியோதனனாக நடித்தேன். நான் சம்ஸ்கிருதத்தில் அநேக நாடகங்களைப் படித்திருக்கிறேன்; அவற்றுளெல்லாம் எனக்கு மிகவும் அதிருப்தியைத் தந்தது இந்த வேணி சம்ஹார நாடகமே. இது காரணம் பற்றியே என்னைப் பலர்