பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/637

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

622

நாடக மேடை நினைவுகள்


மேற்சொன்ன அமலாதித்ய நாடகத்தின் செலவு போக, ரூபாய் 300, அதிவிருஷ்டி நஷ்ட பண்டிற்கு அனுப்பினோம். இந்நாடகம் ஆடின மறுமாசம் எங்கள் சபையின் வழக்கப்படி டிசம்பர் மாதத்தில் பத்துப் பதினைந்து நாடகங்கள் ஆட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

அந் நாடகங்களுக்குள் மூன்று நாடகங்களில் நான் முக்கியமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன்; அதாவது, ரத்னாவளியிலும், லீலாவதி-சுலோசனாவிலும், மனோகரனிலும். இந் நாடகங்களில் என்னுடன் நடிக்க வேண்டிய முக்கிய ஸ்திரீ பாகங்களை அச்சமயம் எங்கள் சபையில் ஸ்திரீ வேடங்களில் நன்றாய் நடிக்க வல்லமை வாய்ந்திருந்த, மூன்று முக்கிய ஆக்டர்களுக்குக் கொடுத்தேன். அதாவது ரத்னாவளியில் வாசவதத்தை வேடத்தை எனது நண்பர் ஈ. கிருஷ்ண ஐயர் பி.ஏ., பி.எல்.க்கும், விஜயன் வேடத்தை சாமிநாத ஐயருக்கும், சுலோசனை வேடத்தை கே. நாகரத்தின ஐயருக்கும்; இவ்வாறு நான் பகிர்ந்து கொடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இனி நாடக மேடையில் முக்கியமான பாத்திரங்களைப் பூணுவதில்லை என்கிற தீர்மானத்தினின்றும், குரங்கானது கிருத்திகை விரதம் அனுஷ்டித்ததுபோல், கொஞ்சம் கொஞ்சமாக மாறி மறுபடியும் ஆடும்படியாக ஆகிவிட்டது; இவர்கள் மூவரில் யார் என் மனத்திற்குத் திருப்திகரமாய் மேடையின் மீது நடிக்கிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களுடனேயே இனி நடிக்க வேண்டும் என்பதேயாம். இப்பரீட்சையில் தேறினவர், இது முதல் தற்காலம் வரை என்னுடன் முக்கிய ஸ்திரீ வேடம் பூண்டு நடித்து வரும் எனது பிரிய நண்பர் கே. நாகரத்தினம் ஐயரே. இவர் சுலோசனையாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததென சபையோரெல்லாம் புகழ்ந்தனர். எனக்கும் அப்படித் தானிருந்ததெனத் தோன்றியது; மற்ற இருவரும் நன்றாய் நடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை; ஆயினும் இவர் நடித்தது மற்றிருவர் நடித்ததைவிட நன்றாயிருந்ததெனச் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன்.

இவ்வருடம் “நமது நாடகங்களை அபிவிருத்தி செய்வது எப்படி” என்கிற விஷயத்தைப் பற்றி எங்கள் சபையில் நான் ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம்