பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/671

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



656

நாடக மேடை நினைவுகள்


இதன் பிறகு சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “மீராபாய்” என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டார். இந் நாடக மானது கவர்ன்மெண்ட் செக்ரடேரியேட் பார்ட்டியாரால் பன்முறை இதற்கு முன்பாக ஆடப்பட்டது. இதில் நான் “அக்பர்” சக்ரவர்த்தியாக நடித்தேன். நான் இவ் வேடம் பூண்டபோது இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனித்தேன்; முதலாவது, அக்பர் சக்ரவர்த்திக்கு ஒரு கன்னத்தில் ஒரு மருள் இருந்ததென அவரது ஜீவிய சரித்திரங்களால் அறிந்து, அவ் வேடம் பூணும்பொழுது அதைக் கவனித்து அப்படியே வேடம் பூண்டேன்; இரண்டாவது, அக்பர் சக்ரவர்த்தி பெரும்பாலும் சிம்மாசனத்தின் பேரில் உட்காராது, அங்கே சர்வேஸ்வரன் இருப்பதாக மதித்து, அதன் படியொன்றில் உட்கார்ந்த வழக்கமுண்டு என்பதை அறிந்து அதன்படி செய்தேன். இதற்கு முன்பாக அக்பர் வேடம் பூண்டவர்கள் இதைக் கவனிக்கவில்லை என்று பலர் கூறக் கேட்டுள்ளேன். இதை நான் எழுதியது நான் ஏதோ புதிதாய்க் கண்டுபிடித்து விட்டேன் என்று பெருமை பாராட்டவல்ல. இனி இவ் வேடம் பூணுபவர்கள் இவை இரண்டையும் கைப்பற்றி நடிப்பார்களாக என்று வேண்டும் பொருட்டே. கல்பிதமான நாடகங்களில் எப்படி வேடம் தரித்தாலும் ஒருவாறு பாதகமில்லை. சரித்திர சம்பந்தமாக நாடகங்கள் ஆடுவதென்றால், இவற்றை யெல்லாம் கவனித்தே ஆட வேண்டுமென்று எனது இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் பொருட்டே இதை எழுதலானேன்.

இவ்வருஷம் நாங்கள் புதிதாக நடத்திய இன்னொரு சிறு கதை, தசராக் கொண்டாட்டத்தில் முதல் நாளில் ஆடப்பட்டது. பூர்வ காலத்தில் (அதாவது கோவிந்தசாமி ராவ் மனமோஹன நாடக கம்பெனி நடத்திய காலத்தில்) சூத்திரதார் வருகிறது, விதூஷகன் வருகிறது, “வரமளித்துப் போகிறது", மோஹினிராஜன் மோஹினிராணி வருகிறது முதலியவற்றையெல்லாம் வைத்து மார்க்கண்டேய நாடகத்தில் சில காட்சிகளை, அக்காலத்திய நாடகக் கம்பெனியார் ஆடிய ஆபாசங்களுடன், வேடிக்கைக்காக. நடித்துக் காட்டினோம். இதில் நான் விதூஷகனாக நடித்தேன். அதற்காக முதல் காட்சியில் தலையில்