பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/722

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

707


இந்த வள்ளி மணம் நாடகம் முடிந்த மறுநாள் நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுத விரும்புகிறேன். இந் நாடகத்தில் “முருகன்” என்கிற பெயருக்குத் தக்கபடி எனது நண்பர் கிருஷ்ணசாமி சாஸ்திரிகள், அப்பொழுது ஐம்பத்தெட்டு வயதாயிருக்கும் என்னை, பதினாறு வயதுடைய வாலிபனைப் போல் வேஷம் போட்டு வைத்தார். இந்த சூட்சுமம் அறியாத, இதற்கு முன் என்னைப் பார்த்திராத வக்கீல் ஒருவர், எனக்கு இன்ன வயது என்பதைக் கேட்டபோது அதை நம்பாதவராய், என்னைக் காண வேண்டுமென்று இச்சை கொண்டு, நாடகத்தின் மறுநாள், நான் அச் சமயம் தங்கியிருந்த எனது மதுரை நண்பர் டாக்டர் நாராயண ஐயர் வீட்டிற்கு அவரைக் காண வேண்டுமென்னும் ஒரு வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு வந்து சேர்ந்து, என்னை நேரில் பார்த்தார். அப்பொழுதுதான், என் வயதைப்பற்றி அவருக்கு மற்றவர்கள் சொன்னது உண்மையென வெளியாயிற்றாம். இதையெல்லாம், பிறகு நாங்களிருவரும் கலந்து வார்த்தை யாடிய பொழுது, அவரே எனக்குச் சொன்னார். நாடக மேடையில் க்ரீன் ரூம் (Green Room) உத்தியோகஸ்தர்களின் திறத்தை அவர் அப்பொழுதுதான் முதல் முதல் கண்டார்!

இவ் வருஷம் எங்கள் சபையார், எனது நண்பர் வி.சி. கோபாலரத்தினம் ஐயங்கார் எழுதிய “ராஜ பக்தி” என்னும் நாடகத்தை நவம்பர் மாதம் 16ஆம் தேதி, சென்னை ராயல் தியேட்டரில் நடித்தனர். மஹாராஷ்டிரா பாஷையிலும், கன்னட பாஷையிலும் எழுதியிருந்த இந் நாடகத்தை, மிகவும் கஷ்டப்பட்டு தமிழில் எனது நண்பர் மொழி பெயர்த்து, மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு ஒத்திகைகள் நடத்தி, இதை நடத்தி வைத்தார். தானே காதநாயகனான “விக்ராந்தன்” வேடம் பூண்டு வெகு விமரிசையாக நடித்தார்; இப் பாத்திரத்தைச் சற்று வேறு விதமாய் நடிக்க வேண்டுமென்று என் அபிப்பிராயமாயிருந்த போதிலும், அவர் சபையோரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்தனர் என்பதற்கு ஐயமின்று. இந் நாடகம் முதன் முறை நடித்த போது எங்கள் சபைக்கு ஆயிரத்துச் சில்லரை ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று. இதை டிசம்பர் மாதம் நாடங்களில் ஒன்றாக மறுபடியும் முக்கோடி ஏகாதசியன்று ஆடினோம். அப்பொழுதும் ஏராளமாய் ஜனங்கள் வந்தனர்.