பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

712

நாடக மேடை நினைவுகள்


இப்பொழுதும். தற்காலம் நான் சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யமுடையவன் என்று சொல்லிக்கொள்ள அசக்தனாயிருந்தபோதிலும், சம்ஸ்கிருதம் கொஞ்சம் அறிவேன் என்றாவது சொல்லிக் கொள்ளக்கூடும். இவ்வாறு நான் கொஞ்சம் கற்றதனாலும் அடைந்த பலன் மாத்திரம் அதிகம். கிரீக் (Greek) பாஷையறியாத ஆங்கிலக் கவி கீட்ஸ் (Keats) என்பவர் முதன் முறை, கிரீக் பாஷையில் றோமர் ஆதிகவியொருவர் இயற்றிய சிறந்த கிரந்தமாகிய இலியட் (lliad) என்பதை சாப்மான் (Chapman) என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததைப் படித்த பிறகு, அதனால் தனக்குண்டான மனக்கிளர்ச்சியை, ஒரு கவியினால் மிகவும் அழகாய் விவரித்திருக்கின்றார். அதைப்போன்ற மனக்கிளர்ச்சியை, சம்ஸ்கிருதம் கற்று, அதிலுள்ள இதிகாச, புராண, நாடகக், காவியங்களில் சிலவற்றைப் படித்த பிறகு, நான் கொஞ்சம் அடைந்தேன் என்றே நான் சொல்ல வேண்டும். அன்றியும் ஒரு உபன்யாசத்தில் நான் கூறியபடி, சம்ஸ்கிருதம் படித்ததனால், தமிழில் எனக்குள்ள சிறு பாண்டித்யமும், அன்பும் அதிகமாய்ற்று என்றே நான் நிச்சயமாய்க் கூறக்கூடும். இவ்வாறு சம்ஸ்கிருத்தைக் கற்றுப் பயனடையும்படி என்னைத் தூண்டியவர், எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்காரே. நான் இவ் வயதில், எனது கோபத்தை ஏறக்குறைய எல்லாவிதத்திலும் அடக்கிய போதிலும், தமிழை தூஷிக்கும் சம்ஸ்கிருத வித்வான்களைக் கண்டாலும் அல்லது சம்ஸ்கிருதத்தைத் தூஷிக்கும் தமிழ் வித்வான்களைக் கண்டாலும் அக் கோபமானது அதிகமாக மூள்கிறது. நமது தேசத்திலுள்ள மற்றச் சச்சரவுகளுடன், இந்த “வடகலை", “தென்கலை” சச்சரவும் நம்மைப் பாழாக்க வேண்டுமா! இச் சச்சரவுகளெல்லாம் நீங்கி நமது தேசம் ஒருமைப்பட்டாலொழிய, நாம் முன்னேற்றமடைவது என்பது கனவிலும் கனவாம். இவ்விரண்டு பாஷைகளையும் பற்றி என் அபிப்பிராயம் என்ன வென்றால், இவ் விரண்டையும் ஒருவன் தன் தாய் தந்தையரைப் போல் போற்ற வேண்டுமென்பதே; ஒருவனுக்குத் தாய் உயர்ந்தவளா, தந்தை உயர்ந்தவனா என்று வாதாடுவதில் என்ன பிரயோஜனம்? இவ்விரு பாஷைகளில் ஒன்றைத் துவேஷிப்பவன், தன் தாய் தகப்பனார்களில் ஒருவரைத் துவேஷிக்கும் பாவத்திற்குள்ளாவான் என்பது என் அபிப்பிராயம்.