பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/728

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

713




மேற்சொன்னபடி நான் சம்ஸ்கிருதம் கொஞ்சம் கற்றதற்குக் கைம்மாறாக அப்பாஷையிலுள்ள சில முக்கிய நாடகங்களை, தமிழ் உலகம் அறியும்பொருட்டு மொழி பெயர்த்து அச்சிட வேண்டுமென்று தீர்மானித்தே, சாகுந்தலம், விக்ரமோர்வசியம், மாளவிகாக்னிமித்ரம் என்னும் மூன்று சம்ஸ்கிருத நாடகங்களையும் என் சக்திக்கு இசைந்தவாறு மொழி பெயர்த் தேன். இவைகளை நான் அச்சிட்டபொழுது, முக்கியமாக இவைகள் தமிழ் நாடக சபைகளுக்கு உபயோகப்பட வேண்டும் என்னும் எண்ணமுடையவனாயிருந்தது பற்றி, அந் நாடகங்களில் சில காட்சிகளைக் குறுக்கி, சில வர்ணனை சுலோகங்களை (அவைகள் நாம் படிப்பதற்கு மிகவும் அழகாயும் ருசியாயுமிருந்தபோதிலும் நடிப்பபதற்கு அவசியமானவை அல்லவென்று) மொழி பெயர்க்காது விட்டுள்ளேன். இதற்காக சம்ஸ்கிருத அபிமானிகள் என்னை மன்னிப் பார்களாக.

பரமேஸ்வரன் எனக்கு ஆயுள் இன்னும் கொஞ்சம் கொடுப்பாராயின், உத்தரராம சரித்திரம், மாலதி மாதவம், மிருச்சகடிகம் முதலிய நாடகங்களையும், தமிழ் நாடக மேடைக் காக, மொழி பெயர்த்து அச்சிடலா மென்றிருக்கிறேன்.

இச் சந்தர்ப்பத்தில், நான் சம்ஸ்கிருத நாடகங்களில் எங்கள் சபையில் நடித்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் ஏதோ கொஞ்சம் சம்ஸ்கிருதம் கற்று வருகிறேன் என்று அறிந்த காலஞ்சென்ற எனது நண்பரும், சம்ஸ்கிருத பாஷையில் மிகவும் அபிமானமும் பாண்டித்ய முடையவ ராகிய டி.எல். நாராயண சாஸ்திரியார், பி.ஏ., பி.எல்., தான் சம்ஸ்கிருத கண்டக்டரான பிறகு, என்னையும் சம்ஸ்கிருதத்தில் நடிக்கும்படி வற்புறுத்தி, வேணி சம்ஹார நாடகத்தில் எனக்கு சார்வாகன் என்னும் பாத்திரத்தை முதல் முதல் கொடுத்தார். “அரைத் துட்டில் கலியாணமாம், அதில் கொஞ்சம் வாண வேடிக்கையாம் என்னும் பழமொழிக்கிசைய, அந்தச் சிறு பாகத்தில், என்னை ஒரு ஸ்லோகமும் பாடும் படி செய்தார்! ஆயினும், இந்தப் பாகத்தை நடிப்பதில் நான் ஒரு கஷ்டப்பட்டேன்! (அக் கஷ்டம் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை) அதாவது சம்ஸ்கிருத பதங்களைச் சரியாக உச்சரிக்கக் கூடாமையே!