பக்கம்:நாடும் ஏடும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்வைத்தல்லது மற்றெதன் வாயிலாய் நடைபெறுகின்றன. நாட்டிலே பலர் தீண்டாதார். நாட்டிலே அன்பே வடிவமாய் அனைத்துலகும் படைத்துக் காத்தழிக்கும் அண்ணலார் கோயில்கள் அநேகம். அந்தணருக்கு அவர் அண்மையிலே இருக்க இடம். ஆனால் அக்கோயிலைத் திருத்தமாய்ச் சமைத்த சிற்பிக்கு இடம் வெகு தொலைவிலே நந்தி தேவர் அருகிலே. மேலும் தீண்டாதார் அருள் திரு ஆண்டவனின் திருக்கோயிலைத் தீண்டவும் தகுதியற்றார். அத்தீண்டாதவரைக் கோயிலுக்குள் நுழையவைக்க வேண்டுமென விழைந்தால் அதற்கு மறுப்பு, வேத ஆகம சாஸ்திரங்களிலிருந்து தரப்படுகின்றது. இதனையும் ஐயங் கொள்ளாமல் அறியாமல் சிறிதும் ஆராய்ச்சி செய்யாமல் மதத்தால் அவர் தம் மதி மந்தமடைந்திருப்பதால் பெரிதும் மதிக்கின்றனர். இது தானா ஏடுகளின் இணையிலாத்தொண்டு

ஏடுகளிலே மதம், அங்கும், இங்கும், எங்கும், என்றும், அநுதினமும் காட்சியளிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். மாற்றித்தான் தீரவேண்டும். நாம் பிற நாட்டு நூல் நிலையங்களைச் சென்று பார்ப்பின் ஆங்கு, கற்றறிந்த நல்லோரால் இயற்றப்பட்ட மத நூல்கள் மிகச் சிலவாகத் தானிருக்கும். அறிவுரை பகரும் ஏடுகள் எண்ணற்று மிளிரும். மதங்கலவாத ஏடுகளின் எண்ணிக்கை எண்ணற்கரியன.

ஒவ்வொரு வீட்டிலுமுள்ள படிப்பறையிலும் இத்தகைய நிலைமைதான் உண்டு. ஆனால் இங்கோ! இதற்கு நேர் மாறான நிலைமை. இந்த நாட்டிலே வீடுகட்டுவர், அதிலே பலப்பல அறைகளும் அமைப்பர். மாட்டுக் கொட்டகை ஒருபால், பொக்கிஷ அறை ஒருபால், சமயலறை மற்றொருபால். பெண்டிற் வீட்டு விலக்கமானால் வதிய மற்றோர்பால் அறை அமைப்பர் வீட்டினிலே. மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மறவார். ஆனால் அறிவூட்டும் அறவுறை மிக்க ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிப் பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது அவசியமானது, அலட்சியப் படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனை-

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/25&oldid=1547543" இலிருந்து மீள்விக்கப்பட்டது