பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பேட்டணிந்த குட்டையையும் தோளில் விலையுயர்ந்த பனாரஸ் சால்வையும் மாட்டிக் கொண்டு கையில் ஒரு வெள்ளித்தடியும் பிடித்துக் கொண்டிருந்தார். இது அக் காலத்திய ஓர் வழக்கம் என்பதற்கு சந்தேகமில்லை. இருந்தாலும் தவறு தவறுதான். இவர் அரிச்சந்திரன் வேடம் தவிர வேறு பாத்திரங்களில் நடித்ததாக எனக்குத் தெரியவில்லை. இவர் பெங்களூர் அப்பாவு பிள்ளையை தன் குருவாகக் கொண்டவர்.

திரு. சுந்தர ஆசாரி

இவர் மேற் சொன்ன சுப்பிராய ஆசாரி கம்பெனியில் சத்தியகீர்த்தியாக (அரிச்சந்திரன் மந்திரி) பல வருடங்கள் நடித்தவர், நன்றாகப் பாடுவார். நடிப்புக் கலையிலும் தேர்ச்சியுடையவர், சுப்பிராய ஆசாரி கம்பெனி கலைந்த பிறகு இவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை நடத்தினார், ஒரு முறை சென்னையில் நாடகக் கொட்டகை அகப்படாது பச்சையப்பன் கலாசாலைக்கு எதிரிலுள்ள மைதானத்தில் ஒரு கூடாரத்தை அடித்து அதில் சில நாடகங்களை நடத்தினார். அவற்றுள் ஒன்றாகிய சாரங்கதரன் நாடகத்தை நான் நேரில் பார்த்தது ஞாபக மிருக்கிறது, அச் சமயம் கதா நாயகனாகிய சுந்தராசாரியும் கதா நாயகியாகிய அப்பாவு பத்தரும் மிகவும் நன்றாய் நடித்த போதிலும் என் மனதை கவர்ந்த நடிகன் விதூஷகன் வேடம் பூண்ட கோபாலன் என்னும் ஓர் பிராமண சிறுவனே. இந்த நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நான் இந் நாடகத்தை கொஞ்சம் கதையை மாற்றி எழுதினேன்.

திரு. கன்னையா

இவர் ஆதியில் சுப்பிராயாசாரி கம்பெனியில் தோட்டிச்சியாக வேடம் பூண்டு நல்ல பெயர் எடுத்தவர். பிறகு சுப்பிராயாசாரி கம்பெனி பிரிந்த பின் தானாக ஒரு நாடக கம்பெனியை ஆரம்பித்தார். இவர் வைஷ்ணவர்களுள் சாத்தாணி பிரிவைச் சேர்ந்தவர். மிகவும் சிறந்த பக்திமான். ஆகவே தனது கம்பெனியில் முக்கியமாக வைஷ்ணவ நாடகங்களையே நடத்தினார். அவ்வாறு நடத்தி பொருள் சேர்த்தபின் இராமாயண நாடகம், கிருஷ்ண லீலா நாடகம் என்னும் நாடகங்களை வெகு விமரிசனையாக நடத்திப் பெயர் பெற்றார். இதன் பிறகு தசாவதாரம் என்னும் ஓர் நாடகம் நடத்தி மிகவும் புகழ்பெற்றார்.