பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

அந்ததசாவதாரம் நாடகத்திற்காக தான் சேர்த்த பொருள்களை எல்லாம் செலவழித்து காட்சிகளையும் நடிகர்களுடைய ஆடை ஆபரணங்களையும் பார்ப்பவர்களெல்லாம் பிரமிக்கும்படி செய்தார். இதன் பலனாக அந்த தசாவதாரம் நாடகம் நூற்றுக் கணக்கான தடவையாக சென்னையில் பீபில்ஸ் பார்க் வடமேற்கிலிருந்த கொட்டகையில் நடத்தப்பட்டது. காட்சிகள் முதலியன வெல்லாம் மிகவும் நன்றாகவும் பார்ப்பவர்களுடைய கண்களை கவருவனவாகவும் இருக்க வேண்டுமென்பது இவரது ஒரே கோரிக்கை. அவற்றிற்காக எவ்வளவு பொருள் செலவானாலும் அதை கவனிப்பதில்லை. அன்றியும் குறித்த காலப்படி நாடகங்கள் ஆரம்பிப்பதில் மிகவும் ஈடுபட்டவர், நடிகர்களையும் பாத்திரங்களுக்குத் தகுந்தபடி தேர்ந்தெடுப்பதில் மிகவும் நிபுணர். இப்படிப்பட்ட பல காரணங்களால் இவர் கையில் பொருள் அதிகமாய் சேர்ந்தது. இப் பெரும் பொருளை எல்லாம் செலவழித்து இதன் பிறகு பகவத் கீதை என்னும் நாடகத்தை புதிய முறையில் எழுதச் சொல்லி நடத்த ஆரம்பித்தார், இந் நாடகத்திற்காக லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்தார் என்று நான் சொல்வதானால் மிகையாகாது. இந் நாடகமானது பீபில்ஸ் பார்க் கொட்டகை யில் 1008 தடவை ஆடப்பட்ட தென்று எனக்கு அதில் கிருஷ்ண வேஷதாரியாக நடித்தவர் நேரில் சொல்லியிருக்கிறார். இம் மாதிரியாக ஐரோப்பா முதலிய கண்டங்களிலும் ஒரே நாடகம் 1008 தடவைக்கு மேல் நடத்தப்பட்டதாக நான் கேட்டதும் இல்லை. அப் பெருமை காலஞ் சென்ற கன்னையா அவர்கட்குத்தான் உரித்தாயது. முதலில் தினம் ஒரு முறை ஆட ஆரம்பித்து வரவர டிக்கட்டுகள் இல்லாமல் ஜனங்கள் காத்திருக்கிறார்கள் என்று அறிந்தவராய் சில தினங்களில் அவர்கள் சௌகர்யத்திற்காக இரண்டு முறையும் நடத்தி வந்தார். சென்னையில் இந் நாடகத்தைப் பாராத நாடகாபிமானி ஒருவரும் இல்லை என்றே கூற வேண்டும். இதைப் பார்க்க வேண்டுமென்று ஜனங்கள் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்தும் வந்தார்கள் என்பதை நான் அறிவேன், பலர் இதை மூன்று நான்கு முறை திருப்பி திருப்பிப் பார்க்க விரும்பி அப்படியே செய்தனர் என்பதையும் நான் அறிவேன். பகவத்கீதைக்கு அப்புறம் இவர் ஒரு பெரிய நாடகத்தையும் நடத்தியதாக எனக்கு ஞாபகமில்லை.

இவர் மிகச் சிறந்த விஷ்ணு பக்தர். தன்னை ஆண்டாள் குமாரன் என்று வேடிக்கையாய் கூறிக் கொள்வது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் சூடிக்