பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

திரு. டி. கே. ஷண்முகம் அவர்கள் முயற்சியால் சுவாமிகளுக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மேற்குறித்த இவரது நாடகங்களில் வீர அபிமன்யு என்னும் நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்ததாக சொல்லப்படுகிறது.

திரு. சிவஷண்முகம் பிள்ளை

இவர் எழுதிய நாடகம் கண்டிராஜா, இது சிங்களத்தை ஆண்ட ஒரு அரசனைப்பற்றிய நாடகம். இவர் நாராயணசாமி பிள்ளை நடத்திய சம்பூர்ண இராமாயணத்திற்குத் தக்க பாடல்கள் இயற்றினார். இவர் 'சம்பூர்ண மகாபாரதம்' என்னும் நாடகத்தையும் எழுதியுள்ளார்.

திரு. கிருஷ்ணசாமி பாவலர்

இவர் சிறு வயதில் என்னுடன் சுகுணவிலாச சபையில் நடித்தவர். என்னுடன் சாரங்கதராவில் சுமந்திரராகவும் மனோகராவில் ராஜப்பிரியனாகவும் நன்றாய் நடித்தது ஞாபகமிருக்கிறது. இவர் தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றவர், கவிகள் பாடுவதில் சிறந்த பெயர் எடுத்தவர். ஒருவிதத்தில் இவரை ஆசுகவி என்றே கூறலாம். அவ்வளவு விரைவாக விருத்தங்கள் கட்டுவார். தனது நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுகளைத் தானே கட்டியிருக்கிறார். பிறகு தானாக பால நாடகசபையை ஏற்படுத்தினார். அதற்காக அவர் எழுதிய நாடகங்கள் பதிபக்தி, பம்பாய் மெயில், பஞ்சாப்கேசரி, கதர்பக்தி முதலியவைகளாம்; இவர் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெள்ளிவிழா (silver jubilee) நடந்தபோது தன்னுடைய பாலசபையினரை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப்போய் அச்சமயம் பல தமிழ் நாடகங்கள் நடத்தினார்.

திரு. சந்தானகிருஷ்ண நாயுடு

இவர் சிறுவயதில் நாடகமாடியதாகக் கேள்விப்படுகிறேன். இவர் முத்துசாமி கவிராயருடைய சிஷ்யர். ஆரியகான சபை என்னும் நாடக சபைக்கு இவர் சில நாடகங்களையும் அவற்றிற்குரிய பாட்டுகளையும் எழுதியதாகத் தெரிகிறது. ஆயினும் அவைகளில் ஒன்றும் அச்சிடப்பட்டதாகக் காணோம்.