பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சித்தர் யோக சுவாமிகள் ♦ 195


மயிலா இருக்கிறது நமக்கு? “என்று கூறிச் சிரித்தார். அட்டமா சித்திகளில், வேறொருவர் காணாமல் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் சிறப்பு சித்தர்களுக்குரியது என்பதைப் படித்திருக்கிறேன். ஆதலால் மனத்தில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சுவாமிகள் அங்கே இருந்ததும் உண்மை. இது அட்ட...” என்று தொடங்கினேன். அந்த வார்த்தையை முழுவதும் கூறவிடாமல் சுவாமிகள் உரத்த குரலில் “பொடியா செருப்படி வேண்டுமோ மகனே உனக்கு? வாயை மூடடா” என்றார்கள். பிறகு அன்பொழுகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் நான் சென்னை மீண்டு விட்டேன். யோக சுவாமிகள் எல்லாம் வல்ல சித்தர் என்பதற்கு தலையாய எடுத்துக்காட்டு இதுவாகும்.

என் நினைவில் ஆழமாக நின்ற மற்றொரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். ஒரு முறை யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பல்கலைச் செல்வர் டாக்டர். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், டாக்டர். டி.எம்.பி.மகாதேவன், நான் ஆகிய மூவரும் சென்றிருந்தோம். அமைச்சர் நடேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். திரு.தெ.பொ.மீ.யும் நானும் சுவாமிகளிடம் செல்லும் வாய்ப்பை முன்னரே பெற்றிருந்தோம். திரு.மகாதேவனுக்கு இது புதிய அனுபவம். நான்கு நாட்களும் சொற்பொழிவுகள் முடிந்தவுடன் சுவாமிகளிடம் சென்று ஒரு மணி நேரம் தங்கி அவர்கள் ஆசீர்வாதத்துடன் திரும்புவது வழக்கம். முதல் மூன்று நாட்களிலும் பல திருவிளையாடல்களைச் சுவாமிகள் செய்தருளினார்கள். திரு. மகாதேவன் ஏதாவது பலகாரம் செய்து சுவாமிகளுக்கு அதை நைவேத்தியமாகப் படைத்துவிட்டு அந்த உச்சிஷ்டத்தை நாங்கள் உண்ணவேண்டு மென்று விரும்பினார். அமைச்சர் நடேசனாரிடம் இதைச் சொல்ல, அவர் சமையற்காரனை அழைத்து, “ஏழு அல்லது எட்டு மணிக்குக் குளித்துச் சுத்தமாக இடியப்பமும் சொதியும் தயார்செய்துவை”