பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 199


அவர்கள் எவ்வளவு பெரிய சித்தர் என்பதை அனுபவத்தில் அறிந்துவிட்டேன். அங்கே விமானம் தடைப்பட்ட அதே நேரத்தில் சென்னையில் என் வீட்டிற்கு ஒரு தந்தி வந்திருந்தது. பதினைந்து நாட்கள் மகாநாடு பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டதென்றும், பதினாறாவது நாள் விழாத் தொடங்குமென்றும் தந்தியில் அறிவித்திருந்தார்கள். அப்படியே பதினாறாவது நாள் தொடங்கிய விழாவில் தலைமையேற்று என் பணி முடித்து வந்துவிட்டேன்” என்று கூறினார்கள். யோக சுவாமிகள் என்ற சித்தரிடம் நாங்கள் அனுபவித்த இந்த நிகழ்ச்சி, அவர் யாரென்பதை எடுத்துக் காட்ட உதவும்.

மேலே கூறிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்து சுவாமிகளின் யோகசித்தியையும், பக்தர்களுக்கு அருளுகின்ற திறத்தையும் என்னால் காண முடிந்தது. இனி நான் சொல்லப்போகும் நிகழ்ச்சி எனக்கு நேரடியாக நேர்ந்த அனுபவமாகும். சுவாமிகள் இருக்கும் காலத்திலேயே இதுபற்றி எழுதவேண்டுமென்று ஈழகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகள் வேண்டியும் மகானின் உத்தரவில்லாமல் அதைச் செய்ய முடியாதென்று கூறிவிட்டேன். இப்போது அதனை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, அப்பெருமகனார் சித்தி அடைந்துவிட்டார். இரண்டாவது, என்னுடைய வயதும் எண்பதைக் கடந்துவிட்ட காரணத்தால் பின்னர் வரும் சமுதாயம் எத்தகைய அருளாளர்களை இந்தத் தமிழினம் பெற்றிருந்தது என்பதை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆதலால்தான் இதனை விரிவாக எழுத முற்பட்டேன்.

1955வாக்கில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரணவாய் தெற்கு என்ற ஊரில் பத்துநாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்வதாக ஒப்புக்கொண்டு சென்றேன்.