இப்பெருமகனார் 1935இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பதவியேற்று 1940இல் அதை விட்டுவிட்டார். யான் அங்குப் படித்த 1935முதல் 1940 வரை இவரே துணைவேந்தராக இருந்தார். ஆங்கிலம் பேசுவதில், ஆங்கிலேயர்களையும் விஞ்சியவர் இவர் என்று ஆங்கிலேயர்களே பாராட்டும் வகையில் சிறப்புப் பெற்றிருந்தார், கோபாலகிருஷ்ண கோகலே அவர்களின் மிதவாதக் கட்சியில் அங்கம் வகித்த இவரையோ, கோகலேயையோ சரியாகப் புரிந்து கொள்ளாத பலர், ‘ஆங்கிலேயருக்கு வால்பிடிக்கும் கூட்டத்தார்’ என்று இவர்களை மறைமுகமாக ஏசிவந்த காலமது.
துணைவேந்தர் என்றால் கல்லூரி மாணவர்களுக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இராது. அப்படியிருந்த காலத்தில் மாணவர்களிடையே வந்த அமர்ந்துகொண்டு, மாணவர்களைப் போலவே ‘கூத்தடிப்பார்’ சாஸ்திரியார் அவர்கள்.
அந்நாளில் ‘யூனிவர்சிடி யூனியன்’ என்ற பெயருடன் ஒரு பெரிய கழகம் செயற்பட்டுக்கொண்டிருந்தது. நடைமுறை முழுவதும் ஆங்கிலந்தான். எனவே அதன் தலைவராகப் போட்டியிடுபவர்கள் பிற துறைகளிலிருந்து வருவார்களே தவிரத் தமிழ்த்துறையில் உள்ளவர்கள் யாரும் அதில் நுழைய முடிவதில்லை. ஆனால், ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுவதில் பயிற்சி பெற்ற நான் இந்தப் பல்கலைக்கழக யூனியன் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டேன். பாராளுமன்ற முறைப்படி யூனியன்