36
நான் எவ்வாறு நாஸ்திகத்தை அனுஷ்டிக்கிறேன் என்று கூறுகிறேன். ஒருநண்பர் பிரார்த்தனை செய்யும்படி என்னை வேண்டிக்கொண்டார். நான் எனது நாஸ்திகத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். அப்பொழுது அவர், “உனது கடைசி நாட்களில் நீ நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்து விடுவாய்” என்றார். நான் அவரிடம், “ அன்பார்ந்த அய்யா! அப்படிநேரவே நேராது. அவ்வாறு நம்புவது, என்னை அகவுரவப்படுத்தி, அவமானப்படுத்துவதாகவே நினைப்பேன் பலவீனத்தால், சுயநல நோக்கங்களால் நான் பிரார்த்தனை செய்யப்போவதில்லை” என்று சொன்னேன். 'வாசகர்களே! நண்பர்களே!! “இது அகங்காரமாகுமா?” அகங்காரந்தானென்றால் நான் அப்படிப்பட்ட அகங்காரத்தையே விரும்புகிறேன்.
பகவத்சிங்கைப்பற்றி ‘குடிஅரசு!’
[இந்த வியாசம் 29-3-31ல் வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது குறித்து குடி அரசு இதழில் எழுதப்பட்ட தலையங்கமாகும்]
வீரர் பகவத்சிங் இவ்வாரம் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங் காட்டாதார்கள் யாருமே இல்லை அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல், இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும்கூட அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.
இவை ஒருபுறம் நடக்க, இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால், அவர்கள் சர்க்கார் தலைவரான மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி திரு. இர்வின் பிரபு அவர்களைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப்பற்றி மிக்க திருப்தியடைந்திருப்ப-