பக்கம்:நாயகர் பெருமான்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அபூதாலிப் அவர்கள் தம் தந்தைக்கு வாக்குக் கொடுத்த வண்ணமே, குழந்தையை என்றும் தம்முடன் வைத்துப் போற்றி வளர்த்து வந்தார்கள்.

3. துறவியாரின் எச்சரிக்கை

பெருமான் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அபூதாலிப் அவரைக் கல்வி பயிலச் செய்யவில்லை. பள்ளிக் கூடத்துக்கோ, அல்லது தனி ஆசிரியரிடமோ அனுப்பி வைக்கவில்லை. பெருமானவர்கள் அக்கால வழக்கப்படி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

கல்வியறியாதவர் என்னும் கருத்துப்பட்ட ‘உம்மி’ என்ற அடை மொழியைச் சேர்த்தும் பெருமானவர்களின் பெயரைக் குறிப்பிடுவதுண்டு.

ஒரு முறை அபூதாலிப் அவர்கள் வாணிகம் செய்வதற்காக ஷாம் நாட்டிற்குப் புறப்பட்டுப் போனார். அப்போது பெருமானும் உடன் வருவதாகக் கேட்டுக் கொள்ளவே அவர் தம்முடன் அழைத்துச் சென்றார்.

ஷாம் தேசத்தில் புஸ்ரா என்னும் நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஒரு மடத்தில் அவர்கள் தங்கினார்கள். அது ஒரு கிறித்தவத் துறவியாரின் மடம், அத் துறவியாரின் பெயர் பஹீரா என்பதாகும்.