பக்கம்:நாயகர் பெருமான்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

“நான் குறைஷி வீரர்களுக்கு அளவிற்கு அதிகமாகக் கொடுத்தது நியாயமற்றதென்று நீங்கள் ஐயப் பட்டதுண்டா?”

“பெருமானவர்களே. எங்களில் சில இளைஞர்கள் அவ்வாறு கூறியது உண்மைதான்” என்று முதியவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

பெருமானவர்கள் அந்த அன்சாரிகளை நோக்கி உருக்கமான சில கேள்விகள் கேட்டார்கள்.

“தொடக்கத்தில் நீங்கள் வழி தவறிச் சென்று கொண்டிருந்தீர்கள். ஆண்டவன் உங்களை நேர் வழிக்குக் கொண்டு வந்தது என் மூலமாக அல்லவா?

“நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு வாழ்ந்த நிலையை மாற்றி ஆண்டவன் உங்களை ஒற்றுமைப் படுத்தியது என் மூலமாக அல்லவா?

“வறுமைக்காளாகியிருந்த உங்களை ஆண்டவன் செல்வர்களாய் உயர்த்தியது என் மூலமாக அல்லவா?

பெருமான் அவர்கள் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டுவர, அக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலாக, “ஆண்டவனின் உதவியும், அவனுடைய திருத்தூதரின் உதவியும் யாவற்றினும் உயர்ந்தன” என்று அன்சாரிகள் கூறிக் கொண்டே வந்தார்கள்.