7. அமர்நீதி நாயனார்
சோழ நாட்டில் பழையாறை என்னும் பதியில் அமர் நீதியார் உதித்தார். சிவன்கழலைச் சிந்தை செய்வதும், அப்பெருமானுடைய அடியவர்களுக்கு அமுது செய்வித்து அவர்களுக்கு உரிய கோவணம் கீள் முதலிய உடை வகைகளே அளிப்பதும் ஆகிய செயல்களைச் செய்வதே தாம் பெற்ற செல்வத்தின் பயன் என்று கருதி ஒழுகுபவர் அவர். வணிகர் குலத்திற் சிறந்து விளங்கிய அவர் பொன், மணி, முத்து, துகில் ஆகியவற்றைப் பல நாடுகளிலிருந்து வருவித்து வியாபாரம் செய்து வந்தார்.
நல்லூர் என்ற தலத்தில் இறைவனுடைய திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். பல ஊர்களிலிருந்து மக்கள் வந்து தரிசித்துச் செல்வார்கள். சிவனடியார்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்து கூடுவார்கள். அந்த விழாவுக்கு அமர்நீதி நாயனார் தம்முடைய சுற்றத்தாருடன் சென்று தரிசித்தார். அங்கே வந்திருக்கும் அடியார்களின் மிகுதியைக் கண்டு அவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும் என்ற அவா அவருக்கு உண்டாயிற்று. அந்தத் தலத்தில் ஒரு பெரிய திருமடம் கட்டித் திருவிழாக் காலங்களில் எத்தனை சிவனடியார் வந்தாலும் அவர்கள் யாவருக்கும் வயிறார உணவளித்து அவர்களுக்கு ஏற்றபடி ஆடை வகைகளை வழங்கினார்.
சிவனடியார்கள் சிவபெருமானேயே தனித் துணையாக எண்ணி வாழ்கிறவர்கள். தம்முடைய செயலாலும் தோற்றத்தாலும் பேச்சாலும் சிவபக்தியை வளர்க்கிறவர்கள். அங்கங்கே உள்ள ஆலயங்கள் தம்மிடம் வந்து வழிபடு கிறவர்களுக்கு நன்மையை உண்டாக்கும். சிவனடியார்