பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



குலம் பேசி உயர்வு காண முயல்வர் நலம் பேசி நன்னிலை அடைய முடியாதவர்; உயர்வு தாழ்வு என்பது பிறப்பால் அமைவது அன்று. அவரவர் செய்யும் தொழில் சிறப்பால் அடைவது ஆகும். மிக்க பொருள் ஈட்டுக; அஃது உன்னை உயர்த்திக் காட்டும். தவம் கல்வி இவற்றோடு ஆள்வினை கூடினால் எதுதான் சாதிக்க முடியாது; தவம் என்பது விடாமுயற்சி, கல்வி என்பது செய்யும் தொழிலைப் பற்றிய நுட்ப அறிவு. ஆள்வினை என்பது செயலாற்றும் திறன்; அடுத்தது சோர்வு இன்மை; இந்த நால்வகைப் பொருளால்தான் மனிதருக்குச் சிறப்பு உண்டாகும். பிறப்பு அனைவர்க்கும் பொது; அதை வைத்துச் சிறப்புக் கொண்டாடுவதில் பயன் இல்லை; அவரவர் செய்யும் தொழிலால் தான் மதிக்கப்படுவர்.

ஒரு காரியத்தை மேற்கொண்டு அதை முடிக்கும் வரையும் அதைப் பற்றி அளவளாவுதல் வெற்றிக்குத் தடையாகும். செய்யும் தொழில் செம்மையுற நடைபெற வேண்டும் என்றால் வீண் பெருமைக்காக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது; அதை மற்றவர்கள் அறிந்தால் அவர்கள் முந்திக் கொள்வார்கள். அது எப்படிச் செய்வது? அதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? இவை எல்லாம் ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தபின் அறியட்டுமே! அதுவரை அடங்கி இருப்பது தக்கது ஆகும். மற்றும் பிறர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் நமக்கு எப்படிப் போட்டியாக வரக்கூடும் என்பது எல்லாம் கூர்ந்து கவனித்து வரவேண்டும். அவர்கள் செய்வது எப்படி என்பதை அறிந்து தம் தொழிலுக்கு அவ் அறிவினைப் பயன்படுத்த வேண்டும். பிறர் தொடர்