பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறி விலை மதிப்பு இல்லா உறவு பாராட்டினால் அவர்கள் மகிழ்வர்: ‘நீ யார்?’ எப்படி உனக்கு உறவு? உனக்கு நன்மை செய்தால் எனக்கு என்ன மேன்மை?" என்று கேள்வி கேட்டு அவர்களைப் புறக்கணித்தால் அவர் வருந்துவர். விருந்தாகிய வேள்வி செய்யாமல் இருப்பவர் கீழ்மக்கள் ஆவர். தராதரம் பாராமல் பராவரும் பண்பினர் யாவராயினும் அவர்களைச் சுற்றமாகக் கொள்பவரே ஏற்றம்மிகு மேன்மக்கள் ஆவர்.

பொன் தட்டில் புலி நகம் போன்ற புழுங்கல் சோறு, கறிகாய், வடை வகை இவற்றை அயலான் அழைக்க அருவிருந்து என அவற்றை வாரிக் கொட்டிக் கொள்வதைவிட நம் வீட்டில் இருந்து கொண்டு நம் உழைப்பில் ஈட்டிய பொருளைக் கொண்டு உப்பு இல்லாத வெறுஞ்சோறு ஆயினும் நம் சுற்றத்தவரோடு அமர்ந்து உண்பதே எக்காலத்தும் இனியது ஆகும். அதற்கு இணையான இன்பம் எதுவுமே இவ்வுலகில் இல்லை.

அவசரம், ஆவேசம், பசி, இவற்றோடு சுவைமிக்க உணவு, நடுப்பகலுக்கு முன்பே சுடச்சுடப் படைத்து உண்ண அழைக்கின்றார்; ஆனால் அவர்கள் முன்பின் பழகாத அறியாத புதியவர்கள்; அயலார்; “அய்யா! கொஞ்சம் பொறு! நேரம் ஆனாலும் ஆகட்டும்; சாயுங்காலம் வரை காத்திருக்க வேண்டுமா? பொறுத்திரு. அது ஆறிய கஞ்சியாக இருக்கலாம்; அஃது அமுதினும் இனியது ஆகும். அயலார் இடுவது கருணைக் கிழங்கு பொறியல் ஆயினும் அது வேப்பங்காய்தான். சுவை என்பது பொருளை ஒட்டியது மட்டும் அன்று. அது தருவாரது மன அருளையும் ஒட்டியும் ஆகும்.