பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


“பள்ளிக்குச் செல்லு” என்று படித்துப் படித்துக் கூறினார் பையனின் தந்தை; துள்ளிக் குதிக்கும் பருவம்; எள்ளி நகையாடினான் அன்று. அடித்தும் பார்த்தார். படியாத மாடாகிவிட்டான். ‘கல்’ என்று சொன்னால் அவன் அது 'தக்க சொல்' என்று எடுத்துக் கொள்ள வில்லை. இன்று அவன் நிலைமை என்ன? பலபேர் கூடியிருக்கும் அவையில் நீட்டோலை வாசிக்க முடியாத நெடுமரமாக நிற்கிறான். ‘ஏடு அறியேன் எழுத்து அறியேன்’ என்று நாடோடிப் பாடல் பாடுகிறான். அவன் அங்கே நிற்க முடியாமல் நாணி அந்த இடத்தை விட்டு ஓடோடி வந்து சேர்கிறான். கல்லாதவன் நிலை இதற்கு மேல் எப்படிச் சொல்ல முடியும். அன்று அடித்துத் திருத்தியபோது படித்துத் தொலைக்காதவன் இன்றுபடும் வேதனை இது.

இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈயிற்கு என்ன வேலை? அந்தச் சூடு அது தாங்காது. கற்றவர் அவையில் கல்லாதவன் செல்வது அவனுக்கு எந்தப் பயனும் விளையாது. அவன் வாயைத் திறந்தால் நாய் குரைக்கிறது என்பர். அவன் எதுவும் உரையாமல் இருந்தாலும் நாய் கிடக்கிறது என்பர். கத்தினாலும் தப்பு; சத்தமில்லாமல் சுத்தமாக இருந்தாலும் அஃது ஏற்கப்படுவது இல்லை.

படித்தவன்தான்; பட்டம் பெற்றவன்தான். ஆனால் முழுவதும் கல்லாதவன்; அவன் வாயைத் திறக்கிறான். சும்மா இருந்தால் சுகம்; தன் கல்வித் திறனைக் காட்ட உளறுகிறான். ஆழப்படிப்பு இல்லை; புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை. அவர்கள் கற்றவர்கள் என்று கருத முடியாது. மேலும் கற்பதே கல்வி என்று கருதப்படும். தொடர்ந்து நூல்களைக் கல்லாமை அறிவு விளக்கத்திற்குத் தடையாகும்.